சென்ற மாதம் 28ஆம் தேதியன்று இல்லத்தரசியான சித்தி ரவுதா முகம்மது அலி, சில நிமிடங்களில் சுமார் 100,000 வெள்ளியை இழந்தார். ஏழு பிள்ளைகளுக்குத் தாயான இவர், ஒசிபிசி வங்கி அனுப்பியதுபோல் இருந்த குறுந்தகவலால் ஏமாற்றப்பட்டார்.
"எனது உலகமே என் மீது இடிந்து விழுந்ததுபோல் இருந்தது. ஒன்றும் செய்யமுடியாத உணர்வு எனக்குள் நிலவியது,' என்று ஏமாற்றிப் பறிக்கப்பட்ட பணம் குறித்து பல முறை தனது கைபேசிக்குத் தகவல் வந்த வண்ணம் இருந்ததுஎன்று திருவாட்டி சித்தி கூறினார்.
சென்ற மாதம் குறுந்தகவல்களின்வழி நிகழ்த்தப்பட்ட மோசடிக்கு ஆளான சுமார் 470 ஓசிபிசி வங்கி வாடிக்கையாளர்களில் இவரும் ஒருவர். ஏமாற்றப்பட்டோர் அனைவரும் மொத்தமாகக் குறைந்தது 8.5 மில்லியன் வெள்ளியை இழந்தனர். கிறிஸ்துமஸ் வார இறுதியில் மட்டும் 186 பேர் மொத்தமாகக் கிட்டத்தட்ட 2.7 மில்லியன் வெள்ளியைப் பறிகொடுத்ததாக ஒசிபிசி தெரிவித்தது.
இச்சம்பவத்தால் பெரும் மனக்கவலைக்கு உள்ளான திருவாட்டி சித்தி, சில நாள்களுக்கு அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமப்பட்டார். இவர் இழந்த பணத்தை ஓசிபிசி திரும்பிக் கொடுத்தது. எனினும், திருவாட்டி சித்தி இன்னமும் மனநல ஆலோசகரின் உதவியை நாடுகிறார். ஏமாற்றப்பட்டோரில் சிலர், ஒசிபிசி அதிகாரிகளைத் தொடர்புகொள்ள தொலைபேசியில் 20 நிமிடங்களுக்கும் மேல் காத்திருந்ததாகக் கூறினர். நடவடிக்கை எடுக்கப்படுவதற்குள் பலர் தாங்கள் சேமித்ததில் பெரும்பங்கை இழக்க நேரிட்டது. நிலைமையைச் சரிசெய்ய ஓசிபிசியுடன் அதிகாரிகளும் சென்ற வாரம் விரைந்து தகுந்த நடவடிக்கைகளை எடுத்தனர். இதனால் மின்னிலக்க வங்கி முறை பாதுகாப்பானதா என்ற கேள்வி எழுகிறது.
அண்மைக் காலமாக நிகழும் ஏமாற்றுச் சம்பவங்கள் புதிதல்ல. பல ஆண்டுகளாக எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும் சிலர் இன்னமும் மோசடிக்கு ஆளாகின்றனர். 2005ஆம் ஆண்டுக்கும் 2006ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் குறுந்தகவல்களின்வழி நிகழ்த்தப்படும் மோசடிச் சம்பவங்கள் உருவெடுத்தன என்று இணையப் பாதுகாப்பு வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அத்தகைய சம்பவங்கள் மீண்டும் தலைதூக்குவதாக 2019ஆம் ஆண்டு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
ஏமாற்றுக்காரர்கள் காலத்துக்கு ஏற்றவாறு மேம்பட்ட முறையில் மோசடி செய்கின்றனர். வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கை முறையால் சிலர் ஏற்கெனவே விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளைக் கருத்தில்கொள்வதில்லை என்றும் கூறப்படுகிறது.