சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தில் பயிலும் வசதி குறைந்த மாணவர்கள் இப்போது அந்தப் பல்கலைக்கழகத்துக்குக் கிடைத்திருக்கும் $25 மில்லியன் நன்கொடை தொகையிலிருந்து பல்வேறு உதவிகளைப் பெறலாம்.
வெளிநாட்டுப் பகிர்வுத் திட்டங்கள், வேலைப் பயிற்சிகள் மற்றும் இதர அனுபவக் கற்றல் வாய்ப்புகள் அந்த மாணவர்கள் பெறக்கூடிய உதவிகள்.
'நீ ஆன் கொங்சி எழுச்சி நிதி' என்று அழைக்கப்படும் அது இதுவரை அந்தப் பல்கலைக்கழகம் பெற்றுள்ள ஆகப் பெரிய நன்கொடையாகும் என்று அதன் தலைவர் திரு சுவா கீ சியாங் நேற்று தெரிவித்தார்.
ஒவ்வோர் ஆண்டும் $2.5 மில்லியன் வீதம் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு அந்த நிதி சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்துக்கு வழங்கப்படும்.
"இந்தப் புதிய நிதி, மாணவர்கள் பங்கேற்கும் தலைமைத்துவ திட்டங்களுக்கும் பயன்பாட்டு ஆராய்ச்சி திட்டங்களுக்கும் ஆதரவளிக்கும்," என்றார் பேராசிரியர் சுவா.
நீ ஆன் கொங்சி அமைப்பிலிருந்து கிடைத்திருக்கும் இந்த நன்கொடை, பொங்கோலில் எதிர்காலத்தில் அமையவிருக்கும் சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தில் நிரந்தர வளாகத்தில் அமையும் நூலகத்தின் மேம்பாட்டுக்கு மேலும் ஆதரவளிக்கும். அந்த நூலகம் தொழில்நுட்ப ஆற்றலுடைய கூட்டு கற்றல் இடமாக அமையும்.
தற்போது டோவர் ரோட்டில் அமைந்துள்ள தற்காலிக பல்கலைக்கழக வளாகம் தனது நூலகத்துக்கு நீ ஆன் கொங்சி நூலகம் என பெயர் சூட்டியுள்ளது. அந்தப் பெயர் 2024ல் பொங்கோலில் செயல்படத் தொடங்கும் பல்கலைக்கழகத்தின் நூலகத்துக்கு மாற்றப்படும்.
நேற்றைய பெயரிடும் விழாவில் பங்கேற்ற கல்வி அமைச்சர் சான் சுன் சிங், "நீ ஆன் கொங்சி அமைப்பைப் போல, மற்ற அறநிறுவனங்களும் வெற்றிகரமான வர்த்தகங்களும் சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம் மட்டுமல்லாமல் சிங்கப்பூரில் உள்ள மற்ற உயர்கல்வி நிலையங்களுக்கும் கூட்டு கற்றல் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
"வேலைப் பயிற்சிகள், தொழிலியல் ஒத்துழைப்பு போன்ற வாய்ப்புகள்தான் நமது மாணவர்கள் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளக்கூடிய ஆற்றல்களை ஏற்படுத்திக் கொடுக்கும்," என்று தெரிவித்தார்.