மறதிநோய் இருப்பதால் வீட்டில் சொல்லிக்கொள்ளாமல் வெளியே சென்று தொலைந்துபோகும் ஆபத்தில் உள்ளோருக்கு உதவ வழி பிறந்துள்ளது. தோபாயோ பேருந்து முனையத்தில் பாதையைக் கண்டறிவதற்காக ஓவியங்களைக் கொண்ட வழிகாட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
'ஃபைண்ட் யுவர் வே' எனும் 'உங்கள் வழியை அறியுங்கள்' எனும் புதிய திட்டம் இதனை அமைத்துள்ளது.
முதியோர், மறதிநோய் உள்ளவர்கள் போன்றோருக்குப் பொதுப் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்த உதவுவது இத்திட்டத்தின் இலக்கு.
வண்ணமயமான வழிகாட்டிகள் இத்தகையோர் தொலைந்துபோகாமல் இருக்கக் கைகொடுக்கும். பாலர் பருவத்தில் இவர்கள் ஈடுபட்டிருக்கக்கூடிய விளையாட்டுகளைச் சித்திரிக்கும் ஓவியங்கள் நினைவாற்றலை மேம்படுத்தி உதவிக்கரம் நீட்டலாம்.
எஸ்பிஎஸ் டிரான்ஸிட் போக்குவரத்து சேவை நிறுவனம், மறதிநோய் சமூக சேவை அமைப்பான 'டிமென்ஷியா சிங்கப்பூர்' ஆகிய இரண்டும் 'உங்கள் வழியை அறியுங்கள்' திட்டத்தை நடத்துகின்றன.
மறதிநோய் உள்ளவர்களின் கருத்துகளின் அடிப்படையில் இவ்விரு அமைப்புகளும் வழிகாட்டிகளை உருவாக்கியுள்ளன.
'உங்கள் வழியை அறியுங்கள்' திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. அதையொட்டி செய்தியாளர்களுக்கு தோபாயோ பேருந்து முனையம் சுற்றிக் காட்டப்பட்டது.
இந்தப் பேருந்து முனையம் ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொன்றிலும் வெவ்வேறு வண்ணத்தில் பழைய நினைவுகளைக் கொண்டுவரக்கூடிய சிறுவர் விளையாட்டுகளைச் சித்திரிக்கும் ஓவியங்கள் இடம்பெறுகின்றன. 'சாப்தே', கோலி விளையாட்டு உள்ளிட்டவற்றை ஓவியங்கள் சித்திரிக்கின்றன.
போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் இத்திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.
"2040 நிலப் போக்குவரத்துப் பெருந்திட்டத்தின்கீழ் பயணிகளின் பலதரப்பட்ட தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் நமது பொதுப் போக்குவரத்து முறையை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்," என்று பீஷான்-தோபாயோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் குறிப்பிட்டார்.
அங் மோ கியோ, பூன் லே, ஹவ்காங் சென்ட்ரல் ஆகியவற்றில் உள்ள பேருந்து முனையங்களிலும் இந்த வழிகாட்டி ஓவியங்களை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், சைனாடவுன், பூன் கெங், கோவன், கேலாங் பாரு உட்பட ஐந்து பெருவிரைவு ரயில் நிலையங்களில் இத்திட்டம் நீட்டிக்கப்படவுள்ளது.