சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் (என்யுஎஸ்) பயிலும் வசதி குறைந்த முழுநேரப் பட்டக் கல்வி மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட இருக்கிறது.
நிதி உதவி சிங்கப்பூரர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். தனிநபர் வருமானமாக $1,000க்கும் குறைவான தொகையை ஈட்டும் குடும்பங்களிலிருந்து வரும் பட்டக் கல்வி மாணவர்கள் பல்கலைக்கழகக் கல்விக் கட்டணங்களைச் செலுத்தத் தேவையில்லை.
இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தில் புதிய கல்வி ஆண்டு தொடங்கும்போது ஏற்கெனவே நடப்பில் உள்ள அரசாங்க உதவித் தொகை போக, அதற்கு மேல் கூடுதல் நிதி வழங்கி வசதி குறைந்த
பட்டக் கல்வி மாணவர்களுக்கான பல்கலைக்கழகக் கல்விக் கட்டணங்களை என்யுஎஸ் செலுத்தும்.
இந்த ஆக அண்மைய மேம்
படுத்தப்பட்ட ஆதரவுக்காக ஒவ்வோர் ஆண்டும் $15 மில்லியனை என்யுஎஸ் ஒதுக்கிவைக்கும்.
இந்த நிதி உதவியால் ஏறத்தாழ 3,300 பட்டக் கல்வி மாணவர்கள் பயனடைவர் என்று எதிர்பார்க்கப்
படுகிறது.
மானுடவியல், அறிவியல் போன்ற பொதுத் துறைகளில் பயிலும் பட்டக் கல்வி மாணவர்களுக்கு அவர்களது குடும்ப வருமானத்தைப் பொறுத்து ஆண்டுக்குக் கூடுதலாக $2,300லிருந்து $7,000 வரையிலான நிதி உதவி வழங்கப்படும்.
வசதி குறைந்த மாணவர்களுக்கும் உயர் கல்வி கிடைப்பதை உறுதி செய்ய என்யுஎஸ் இந்த முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஏற்கெனவே நிதிச் சுமையால் பாதிக்கப்பட்டுள்ள வசதி குறைந்த குடும்பங்களுக்கு கொவிட்-19 நெருக்கடிநிலை கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் குடும்பங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்ட வேறு பல அமைப்பு களும் கூடுதல் நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில் என்யுஎஸ் பல்கலைக்கழகமும் கூடுதல் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
சுய உதவி அமைப்பான மெண்டாக்கி அதன் துணைப்பாட வகுப்பு களுக்கான வருடாந்திரப் பதிவுக் கட்டணங்களை இவ்வாண்டு குறைத்துள்ளது.
மெண்டாக்கி துணைப்பாட வகுப்புகளுக்கு விண்ணப்பிக்கும் மலாய்/முஸ்லிம் மாணவர்கள் தற்போது $10 மட்டுமே செலுத்த வேண்டும். இதற்கு முன்பு அவர்கள் $210 செலுத்த வேண்டியிருந்தது.
வசதி குறைந்த குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கு வழங்கப்படும் நிதி ஆதரவுத் திட்டத்தை விரிவுப்படுத்துவதாகவும் புதிய நிதி உதவி அதில் அடங்கும் என்று என்யுஎஸ் கூறியது.
புதிய நிதி உதவியைப் பெற என்யுஎஸ் பல்கலைக்கழகத்தில் ஏற்கெனவே பயின்றுவரும் வசதி குறைந்த மாணவர்களும் புதிதாகச் சேரும் வசதி குறைந்த பட்டக் கல்வி மாணவர்களும் தகுதி பெறுவர். தனிநபர் வருமானமாக $690க்கும் குறைவான தொகையை ஈட்டும் குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்களுக்குக் கூடுதல் நிதி ஆதரவு வழங்கப்படும்.
சொந்த செலவைச் சமாளிக்க உதவும் வகையில் தகுதி பெறும் ஒவ்வொரு மாணவருக்கும்
ஆண்டுதோறும் $4,000 உதவித் தொகை வழங்கப்படும்.
என்யுஎஸ் பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடரவும் வெளி
நாட்டுக் கல்வி அனுபவத் திட்டங்களில் ஈடுபடவும் விருப்பம் இருந்தால் புதிய வாய்ப்பு மேம்பாட்டு மானியத்தின்கீழ் நான்கு ஆண்டு காலத்தில் அவர்களுக்கு $10,000 வழங்கப்படும்.
தற்போதைய நிலவரப்படி, ஏறத்தாழ 16,000 என்யுஎஸ் மாணவர்கள் நிதி உதவி பெறுகின்றனர். அப்பல்கலைக்கழகத்தின் மொத்த பட்டக் கல்வி மாணவர்களில் இது 55 விழுக்காடாகும்.