சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள 360 பேருந்து நிறுத்தங்கள், முதியோருக்குக் கூடுதல் வசதியையும், பாதுகாப்பையும் தரும் நோக்கில் மேம்பாடு காணவிருக்கின்றன.
படிகளை அகற்றுதல், பேருந்தினுள் எளிதாக ஏற வசதியாக நடைபாதை உயரத்தை சரிசெய்தல், நிறுத்தங்களில் வெளிச்சத்தை அதிகரித்தல் போன்றவை மேம்பாட்டு அம்சங்களில் சில என்று போக்குவரத்திற்கான மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் நேற்று தெரிவித்தார்.
நிலப் போக்குவரத்து ஆணையம், சாத்தியமான இடங்களில், கூடுதல் இருக்கைகளை அமைப்பதுடன், பேருந்து நிறுத்தங்களின் இடவசதியையும் அதிகரிக்கும் என்றார் அவர்.
மூத்தோருக்கும் சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்தும் பயணிகளுக்கும் அது உதவும் என்று திரு. சீ தமது ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். பேருந்து நிறுத்த உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் அத்தகைய நட வடிக்கைகளில், மழையில் அதிகம் நனையாமல் இருக்க தடுப்புகளும் அமைக்கப்படும்.
மேம்பாட்டுப் பணிகளுக்கு முதலில் அடையாளம் காணப்பட்ட 117 பேருந்து நிறுத்தங்களில் சென்ற ஆண்டு பணி தொடங்கியது.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் அது நிறைவடையும். அதன் தொடர்பில் இதுவரை 88 தற்காலிகப் பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஏப்ரல் இறுதியில் அத்தகைய மேலும் 29 பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்படும்.
360 பேருந்து நிறுத்தங்களிலும் 2025 மத்திக்குள் மேம்பாட்டுப் பணிகளை நிறைவுசெய்ய இலக்கு கொண்டிருப்பதாகத் துணையமைச்சர் தெரிவித்தார்.