நோய்ப் பரவலைத் தடுக்க செயல்பாட்டில் இருக்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று நேற்று முன்தினம் அமைச்சுகள் நிலைப் பணிக்குழு விடுத்த அறிவிப்பை வரவேற்று மக்கள் மனஆறுதல் அடைந்துள்ளனர். சமயச் சடங்குகள், வர்த்தக நிகழ்வுகள், ஊடக மாநாடுகள், இறுதிச் சடங்கு, திருமண விருந்து போன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் அதிகபட்ச எண்ணிக்கை வரம்பு அடுத்த மாதம் நான்காம் தேதி முதல் அகற்றப்பட்டுகின்றன. குறிப்பாக சமயத் தலங்களில் வழிபாடுகள் செய்வதற்கு எண்ணிக்கைக் கட்டுப்பாடுகள் இல்லாத நிலையை இறைவன் தந்த வரமாகக் கருதியவர்களில் 47 வயது பாக்கியலட்சுமி ஒருவர்.
முக்கிய, பிரதான நாள்களில் கோவிலுக்குப் போகமுடியவில்லையே என்ற ஏக்கத்தில் ஈராண்டுகளாக அவதிப்படுவதாகத் தெரிவித்த துப்புரவாளரான அவர், இனி வரும் சுப தினங்களில் கோளிலுக்குச் செல்லமுடியும் என்பதில் மன நிறைவு அடைந்துள்ளார்.
முகக் கவசம் அணிந்திருந்தால் ஒரு மீட்டர் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க தேவையில்லை என்பது மிகப்பெரிய ஊக்கமாகும். தினசரி வழிபாட்டிற்கு 150 பக்தர்கள் தற்போது அனுமதிக்கப்படுகின்றனர்.
அடுத்த மாதம் நான்காம் தேதிக்குப் பிறகு சுமார் 250லிருந்து 300 பக்தர்களை கோவிலுக்குள் ஒரே நேரத்தில் அனுமதிக்க இயலும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் 28ஆம் தேதியன்று வரும் பங்குனி உத்திரத் திருவிழாவுக்கு, கொடுக்கப்பட்ட நேரத்தில் ஒரு நுழைவுக்கு 250 பக்தர்களை எதிர்பார்க்கிறோம் என புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயிலின் செயலாளர் திரு அண்ணாதுரை தெரிவித்தார்.
"கட்டுப்பாடுகளை பக்தர்கள் இதுவரை நன்றாக ஏற்றுக்கொண்டுள்ளனர். திருமணங்களில் மார்ச் நான்காம் தேதி முதல் சுமார் 250 விருந்தினர்கள் வருகை அளிக்கலாம் என்பது அனைவருக்கும் நற்செய்தியாகும்," என்று திரு அண்ணாதுரை கூறினார். கலாசார, சமூக, இளையர் அமைச்சிடமிருந்து அதிகாரபூர்வ வழிமுறைகளுக்காகக் காத்திருக்கின்றனர் புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோவில் செயற்குழுவினர்.
அதிகபட்ச வரம்புகளின் அகற்றலை பெரிதும் வரவேற்றாலும் நிலைமை சூழலுக்கேற்ப மாறலாம் எனக் கருதுவதாக ஈசூன் கிறிஸ்துவ தேவாலயத்தின் (ஆங்கிலிக்கன்) தலைவர் இஸ்ரவேல் செல்வம் தமிழ் முரசிடம் தெரிவித்தார். முகக்கவசம் அணிவோருக்கு இடையே சமூக இடைவெளிக்கான விதிமுறை அகற்றப்பட்ட பின்னர் அதிகமானோர் தேவாலயத்திற்குள் வழிபடலாம் என்று அவர் கூறுகிறார்.
"ஆனாலும் மின்னிலக்க மாற்று ஏற்பாடுகள் தொடர்ந்து தயார்நிலையில் இருக்கும். இந்நேரம், கட்டுப்பாட்டு விதிமுறைகளில் மாற்றம் ஏற்படுவது அவ்வளவு புதிதல்ல. எனவே எங்கள் உறுப்பினர்கள் மாற்றங்களுக்கு ஒத்துப்போவர் என்பதில் ஐயமில்லை," என்று அவர் கூறினார்.
இறுதிச் சடங்குகளிலும் மண்டாய் தகனச்சாலையிலும் 30 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்பது தற்போதைய விதி. கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால் வணிகக் கண்ணோட்டத்தில் எங்களுக்கு எந்த மாற்றமும் இல்லை என்றார் ராஜூ காஸ்கெட் உரிமையாளர் திரு லோகநாதன் சுந்தரம் ராஜூ. ஆனால், மறைந்தவரின் குடும்பத்தாருக்கு இது சற்று ஆறுதலாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை தமது திருமணப் பதிவைச் செய்யவிருக்கும் 30 வயது பி. கலைவாணி, தற்போதைய கட்டுப்பாடுகளைப் பின்பற்றியே இதனை நடத்தவேண்டும் என வருத்தத்துடன் தெரிவிப்பதாகக் கூறினார்.
"கூடுதல் பேரை அழைக்கவேண்டும் என்பதைத் தான் விரும்பினேன். ஆனால் இந்தப் பதிவுத் திருமணத்திற்குக் கிட்டத்தட்ட 50 பேரைத்தான் என்னால் அழைக்க முடிந்தது. ஆண்டிறுதிக்குள் நடக்கவுள்ள என் திருமணத்தின்போது இந்தத் தளர்வு தொடரவேண்டும் என்பதே என் விருப்பம்," என்று சொந்தத்தொழில் நடத்தும் அவர் கூறினர்.
சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே 'விடிஎல்' எனப்படும் தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணப் பாதையில் தரைவழிப் பயணிகளின் அனுமதி எண்ணிக்கை இம்மாதம் 22ஆம் தேதியிலிருந்து மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பவுள்ளது. அதன் அறிவிப்பு நேற்று முன்தினம் வெளிவந்ததையடுத்து பேருந்துப் பயணங்களுக்கான முன்பதிவுகள் கிட்டத்தட்ட 30 விழுக்காடு கூடியதாக 'இன்டர்நேஷனல் பெரடைஸ் கனெக்ஷன்ஸ்' பயண நிறுவன உரிமையாளரான 50 வயது ராஜ் பெருமாள் சுப்பையா, தெரிவித்தார்.
கி. ஜனார்த்தனன்
கவின்விழி கதிரொளி