கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க 110 'பிஹெச்பிசி' எனும் பொது சுகாதார ஆயத்தநிலை மருந்தகங்கள் கூடுதல் நேரம் இயங்குகின்றன. சம்பந்தப்பட்ட மருந்தகங்கள் இரண்டு வாரங்களுக்குக் கூடுதல் நேரம் இயங்கும் என்று சுகாதார அமைச்சு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்துள்ளது.
மருத்துவ உதவி தேவைப்படுவோர் உடனே மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்வதற்குப் பதிலாக முதலில் அடிப்படை பராமரிப்பு வழங்கும் மருத்துவரை நாடுமாறு சுகாதார அமைச்சு கடந்த செவ்வாய்க்கிழமையன்று கேட்டுக்கொண்டது. அவசர தேவை இருந்தால் மட்டும் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லுமாறு அமைச்சு குறிப்பிட்டது.
இன்று முதல் அடுத்த மாதம் 10ஆம் தேதிவரை சிங்கப்பூர் முழுவதும் உள்ள சில 'பிஹெச்பிசி' மருந்தகங்கள் வார நாள்களில் இரவு 11 மணிவரை இயங்கும். வார இறுதி நாள்களில் அவை மதியம் இரண்டிலிருந்து ஐந்து மணிவரைக்கும் இரவில் 11 மணி வரைக்கும் இயங்கும்.
சில பலதுறை மருந்தகங்களும் சனிக்கிழமைகளில் மதிய வேளையிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை வேளையிலும் இயங்கும்.
கூடுதல் நேரம் இயங்கும் மருந்தகங்களின் விவரங்களை https://flu.gowhere.gov.sg எனும் இணையத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
ஓமிக்ரான் வகை கொவிட்-19 கிருமிப் பரவல் நிலவரத்தால் இந்தநடவடிக்கை எடுக்கப்படுகிறது. சிங்கப்பூரின் தற்போதைய கொவிட்-19 கிருமிப் பரவல் அலை சில வாரங்களில் உச்சத்தைத் தொட்டு குறையக்கூடும் என்று சுகாதார அமைச்சு சொன்னது.
அண்மைக் காலமாக சுகாதாரப் பராமரிப்புத் துறை பெரும் நெருக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. ஓமிக்ரான் கிருமிப் பரவல் அலை, போதுமான ஓய்வு இல்லாதது, சளிக்காய்ச்சல் பலருக்கு ஏற்படும் காலம் போன்ற காரணங்களால் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் பெரும் சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
நிலைமையைச் சமாளிக்கக் கூடுதல் பணியாளர்களை வேலைக்கு எடுப்பது, தற்போதிருக்கும் ஊழியர்களைக் கூடுதல் நேரம் பணியில் ஈடுபடுத்துவது போன்ற முயற்சிகளை எடுப்பதாக சில 'பிஹெச்பிசி' மருந்தகங்களின் மருத்துவர்கள் முன்னதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தனர்.