சிங்கப்பூரில் கரியமில வாயுவை அதிகம் வெளியேற்றும் நிறுவனங்கள் 2024ஆம் ஆண்டு முதல் கூடுதல் வரி செலுத்தவேண்டியிருக்கும். அதை முன்னிட்டு கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைத்துக்கொண்டு சூரிய சக்தியை அதிகம் பயன்படுத்த சிங்கப்பூரில் இயங்கும் நிறுவனங்கள் முயற்சிகளை எடுத்து வருகின்றன.
இதன் தொடர்பில் ஆக்கபூர்வமான முறையில் எரிசக்தியைப் பயன்படுத்துவதற்கான திட்டங்கள், குறைந்த அளவில் கரியமில வாயு வெளியேற்றம் தொடர்பிலான ஆய்வுகள் போன்றவற்றில் முதலீடு செய்ய நிறுவனங்கள் எண்ணம் கொண்டுள்ளன.
மின்சார உற்பத்தி நிறுவனமான 'பசிபிக்லைட்', இந்தோனீசியாவின் பூலான் தீவில் 670 மெகாவாட்-பீக் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய சூரிய சக்தி ஆலையைக் கட்டி வருவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் சென்ற வாரம் கூறியது. 2025ஆம் ஆண்டு முதல் அந்த ஆலையிலிருந்து சிங்கப்பூருக்கு மின்சாரம் அனுப்பப்படும்.
அந்த ஆலையில் உற்பத்தியாகும் மின்சாரத்தைக் கொண்டு ஆண்டுதோறும் 144,000 நாலறை வீவக வீடுகளுக்கு மின்சாரம் வழங்கமுடியும்.
'பசிபிக்லைட்' நிறுவனம் 2013ஆம் ஆண்டு இயங்கத் தொடங்கியது. அப்போதிருந்தே கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் முயற்சிகளை அதன் ஆலை எடுத்து வந்துள்ளதாக அந்நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் சொன்னார்.
'ஷெல்', 'எக்சோன்மோபில்', 'கெப்பல்' உள்ளிட்ட நிறுவனங்களும் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருவதாகத் தெரிவித்தன.
2050ஆம் ஆண்டு அல்லது அந்த காலகட்டத்திற்குள் கரியமில வாயு வெளியேற்றம் இல்லாமல் செய்வது சிங்கப்பூரின் இலக்கு. அதைக் கருத்தில்கொண்டு கரிம வரி உயர்த்தப்படுவதாக நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் சென்ற மாதம் கூறியிருந்தார்.