சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் புதிய ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பட்டக்கல்வி
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் (எஸ்எம்யு), வரும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து மென்பொருள் பொறியியல் துறையில் புதிய வேலை-கல்வி பட்டக் கல்விப் பாடத்திட்டத்தைத் தொடங்கவிருக்கிறது.
அதில் சேரும் மாணவர்கள் நான்கு ஆண்டுகளுக்கு இளநிலைப் பட்டக் கல்வியைப் பயிலுவர்.
சிங்கப்பூர் வட்டாரத் தொழில்நுட்ப நடுவமாக வளர்ச்சிகாணும் வேளையில், தொழில்நுட்பத் திறனாளர்களுக்கான அதிகரிக்கும் தேவையை ஈடுகட்ட அது உதவும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்தது.
முதல் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மார்ச் 19ஆம் தேதி நள்ளிரவுக்குள் வந்துசேர வேண்டும் என்று அது கூறியது.
இந்த முழுநேரக் கல்வித் திட்டத்தில் 45 மாணவர்களுக்கு முதல் ஆண்டில் சேர வாய்ப்பு அளிக்கப்படும்.
சிங்கப்பூரில் பணியாற்றும் மென்பொருள் பொறியாளர்களுடன் நடத்தப்பட்ட விரிவான ஆலோசனைக்குப் பிறகு, பாடத்திட்டம் வரையப்பட்டது என்றும் சந்தை நிலவரத்துக்கேற்ப அது தொடர்ந்து மேம்படுத்தப்படும் என்றும் எஸ்எம்யு குறிப்பிட்டது.
சென்ற மாதம் புதிய கல்வித் திட்டம் தொடர்பில், அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பான 'கவ்டெக்' உடன் பல்கலைக்கழகம் அதிகாரபூர்வ ஒத்துழைப்பை உறுதிப்படுத்திக்கொண்டது.
பல்கலைக்கழகத்தின் கணினி, தகவல் கட்டமைப்புப் பள்ளியும் பங்காளித்துவ நிறுவனங்களின் மென்பொருள் பொறியாளர்களும் இணைந்து பாடங்களை நடத்துவர்.
பங்காளித்துவ நிறுவனங்கள் அவற்றின் மூத்த ஊழியர்களை அதற்கு நியமனம் செய்யலாம்.
பட்டக் கல்வியின்போது, மாணவர்களுக்கு தொழில்முறைப் பயிற்சிக்கான வாய்ப்புகளும் வழங்கப்படும். மென்பொருள் பொறியாளர்களின் வழிகாட்டுதலில், மென்பொருளை உருவாக்குவதற்கான பயிற்சிகளில் அவர்கள் ஈடுபடுத்தப்படுவர்.
பட்டக் கல்வித் திட்டத்தின் நிறைவில், மாணவர்கள் முழுமையான மென்பொருள் உருவாக்கத் திறன்களுடன், மென்பொருளை வடிவமைத்தல், மேம்படுத்தல், சோதித்தல், நிர்வகித்தல் ஆகிய திறன்களையும் பெற்றிருப்பர்.
இணையப் பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பச் செயலாக்க முறைகள் போன்றவற்றிலும் அவர்கள் பயிற்சி பெற்றிருப்பர். மென்பொருள் ஆய்வு, உருவாக்கம் போன்ற வேலைகளுக்குப் பொருத்தமான திறன்களை மாணவர்கள் பெற்றிருப்பர்.
அதன் தொடர்பில் துறைசார்ந்த இதர பங்காளிகளுடனும் இணைந்து பணியாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகப் பல்கலைக்கழகம் கூறியது.