கல்வி அமைச்சு, கல்வியில் அதிக 'வாழ்நாள் கூட்டுப் பங்கேற்பு' விகிதத்தின் சாத்தியத்தை ஆய்வு செய்வதால், வாழ்க்கைத் தொழிலின் நடுப்பகுதியில் உள்ள சிங்கப்பூரர்கள் மீண்டும் பள்ளிக்குச் சென்று பட்டம் பெற அதிக வாய்ப்புகள் இருக்கும்.
அரசாங்க நிதியுதவி பெறும் பட்டப்படிப்பு திட்டங்களில் வேலை செய்யும் பெரியவர்கள் அதிக அளவில் இடம்பெற அனுமதிப்பது குறித்து தமது அமைச்சு பரிசீலித்து வருவதாக கல்வி அமைச்சர் சான் சுன் சிங் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சிங்கப்பூரர்கள் திறன் பயிற்சி பெறுவதற்கு ஏதுவாக, கல்வி அமைச்சு ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வாழ்க்கைத்தொழில் உருமாற்றத் திட்டத்தை அறிமுகம் செய்யும்.
இந்தப் புதிய திட்டம், எஸ்ஜி ஒற்றுமை திறன்கள் திட்டத்தையும் எஸ்ஜி ஒற்றுமை இயக்கத்தின் முதிர்ச்சியடைந்தவர்களுக்கான பணியிடைக்கால வாழ்க்கைத்தொழில் பாதைகள் நிறுவன இணைப்புத் திட்டத்தையும் ஒன்றிணைக்கும்.
கொவிட்-19 தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளியல் தாக்கத்திலிருந்து சிங்கப்பூரர்கள் விடுபட உதவும் பொருட்டு, இது 2020ல் தொடங்கப்பட்டது.
இந்த இரண்டு திட்டங்களும் இந்த மாத இறுதியில் முடிவடையும். அவற்றை மாற்றும் புதிய முயற்சியாக, இந்தப் புதிய திட்டம் நிரந்தரமானதாக இருப்பதுடன், அதிக மானியத்தையும் பெறும் என்று திரு சான் கூறினார்.
கல்வி, மனிதவளம், வர்த்தக தொழில் அமைச்சுகள், 40 வயதுகளிலும் 50 வயதுகளிலும் உள்ள சிங்கப்பூரர்களுக்கு கணிசமான மறுதிறன் தேவைப்படக்கூடிய கட்டமைப்பு ஆதரவை எவ்வாறு மேம்படுத்துவது என்பதை ஆராய்ந்து வருகின்றன.
உள்ளூர் உயர்கல்வி நிலையங்களில் வேலைவாய்ப்புக்கு முந்தைய பயிற்சி மற்றும் தொடர் கல்வி பட்டப்படிப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களின் விகிதத்தை கல்வி அமைச்சு ஆய்வு செய்யும் என்றார் திரு சான்.
பள்ளிப் படிப்பை முடித்து வெளியேறும் ஒவ்வொரு குழுவுக்கும் மானியத்துடன் கூடிய 40 விழுக்காட்டு இடங்களையும் பெரியவர்களுக்கு 10 விழுக்காட்டு இடங்களையும் ஒதுக்குவது உள்ளூர் பல்கலைக்கழகங்களில் தற்போது உள்ள இலக்காகும்.
இதைத் தாண்டி மக்கள் தங்கள் தேவைகள், விருப்பங்களுக்கு ஏற்ப தொடர்ந்து திறன்களை மேம்படுத்துவதை உறுதி செய்வதில் நாடு கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
ஆறு தன்னாட்சிப் பல்கலைக்கழகங்கள், ஐந்து பலதுறைத் தொழிற்கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆகியவற்றை உள்ளடக்கிய உயர்கல்வி நிலையங்கள், பெரியவர்களைக் கருத்தில் கொண்டு தங்கள் திட்டங்களை மதிப்பாய்வு செய்ய வேண்டும்.
"உயர்கல்வி நிலையங்கள் மூலம் பயிற்சி பெற்ற பெரியவர்களின் எண்ணிக்கை 2018ல் சுமார் 165,000 ஆக இருந்தது. 2020ல் அது 345,000 என இருமடங்காக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்," என்றார் அமைச்சர் சான்.