ஆசிரியர்களுக்கு நன்கு பயற்சியளித்து அவர்களை மேம்படுத்துவதற்கான திட்டங்களுடன் ஆரம்பகால பாலர்பருவக் கல்வி மேம்பாடு காணவிருக்கிறது. அனுபவமுடைய பாலர் பள்ளி ஆசிரியர்கள், தங்களுடைய சகாக்களுக்கு தங்களது அனுபவங்களைப் பகிர வகைசெய்யும் திட்டம் ஒன்றும் அவற்றில் அடங்கும்.
'ஆரம்பகால பாலர்பருவக் கற்றல் சமூகங்கள்' என்று அழைக்கப்படும் இந்தத் திட்டம், அடுத்த மாதம் தொடங்கப்படும். பாடத்திட்டம் வரைதல், கற்பித்தல் முறையில் சிறந்த தலைவர்களாக பங்கேற்பாளர்களுக்கு வழிகாட்டப்படும்.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் ஸுவெலிங், தமது அமைச்சுக்கான வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது நேற்று இதனைத் தெரிவித்தார்.
இந்தக் 'கற்றல் சமூகங்கள்' நான்கு அம்சங்களில் கவனம் செலுத்தும்.
ஆரம்பகால பாலர்பருவத் திறன்கள், வெளிப்புறக் கற்றல், சமுதாய மற்றும் உணர்வுபூர்வ மேம்பாடு, மொழி மற்றும் எழுத்தறிவு ஆகியன அவை.
ஒவ்வொரு பங்கேற்பாளரும் ஈராண்டுகளுக்கு சமூகத்தின் ஒரு பகுதியாக விளங்குவார். முதல் ஆண்டில் குறைந்தது 24 மணி நேரமும் இரண்டாம் ஆண்டில் 40 மணி நேரமும் அவர்கள் கடப்பாடு கொண்டிருக்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக, சமூக கற்றல் நிகழ்வுகளிலும் ஆரம்பகால பாலர்பருவ மேம்பாட்டு வாரியத்தால் வரையப்பட்ட நிபுணத்துவ மேம்பாட்டுத் திட்டங்களிலும் அவர்கள் பங்கேற்கலாம்.
இத்தகைய கற்றல் பகிர்வு அமர்வுகள் மூலம் 2024க்குள் 300 கல்வியாளர்கள் வரை பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்கேற்பாளர்கள் தங்களது இரண்டாம் ஆண்டில் நிபுணத்துவ மேம்பாட்டு மானியம் ஒன்றைப் பெறுவர். அவர்களது முதலாளிகளுக்கு வருடாந்திர மனிதவள நிவாரண நிதியும் வழங்கப்படும்.
பாலர் பள்ளித் துறையில் தலைமைத்துவ ஆற்றலை வலுப்படுத்த திருமதி சுன் 'தலைமைத்துவ மேம்பாட்டுக் கட்டமைப்பு' எனும் திட்டத்தையும் அறிவித்தார்.