கி. ஜனார்த்தனன்
சிங்கப்பூரின் இரண்டு தொடக்கக் கல்லூரிகளில் வழங்கப்படும் தமிழ் மொழி விருப்பப் பாடத்திட்டத்தின் கீழ் (டிஎல்இபி) முதன்முதலில் தமிழ் மொழியைப் படித்தமாணவர்கள், அண்மையில் தங்களது மேல்நிலைத் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொண்டனர்.
ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரியின் 16 'டிஎல்இபி' மாணவர்களும் தேசிய தொடக்கக் கல்லூரியைச் சேர்ந்த 10 'டிஎல்இபி' மாணவர்களும் 'டிஎல்இபி' திட்டத்தின்கீழ் பயனடைந்துள்ளனர்.
இந்தப் பாடத்திட்டம் இந்த இரு கல்லூரிகளில் மட்டுமே வழங்கப்படுகிறது. மாணவர்கள் தேர்வுப் பாடமாக அன்றி, விருப்பப் பாடமாகப் பயிலும் இந்த ஈராண்டு மொழி விருப்பப் பாடத் திட்டம் 1990ல் தொடக்கக் கல்லூரிகளில் தொடங்கப்பட்டது. சீனம், மலாய் மொழிகளில் நடத்தப்பட்டு வந்த இந்த விருப்பப் பாடத்திட்டம் தற்போது தமிழுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாடத்திட்டம் மாணவர்களிடையே மொழி, கலாசார அறிவை வளர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
சிங்கப்பூரில் முக்கியமாகக் கருதப்படும் இருமொழித் திறனை இத்திட்டம் ஊக்குவிக்கிறது.
மேல்நிலைத் தேர்வுக்காக 'எச்2' அல்லது 'எச்3' எனப்படும் உயர்தர நிலையில் தமிழ்மொழியைப் பயிலும் மாணவர்கள், தங்கள் மொழியறிவை வளர்க்கும் கலாசார நடவடிக்கைகளிலும் ஈடுபடவேண்டும். பல்வேறு விருப்பங்களையும் எதிர்கால இலக்குகளையும் கொண்டுள்ள இவர்கள், தங்கள் வாழ்க்கைக்கு தமிழ்மொழி விருப்பப்பாடத் திட்டம் பேருதவியாக இருந்ததாக பகிர்ந்துகொண்டனர்.
கலாசார உணர்வை ஊக்குவித்தது
மொழி ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடக்கக் கல்லூரியில் தமிழ்மொழி விருப்பப்பாடத்தில் தேசிக தீப்தா சேர்ந்தார்.
ஆனால், பேச்சுத் தமிழே அவருக்குச் சவாலாக இருந்த காரணத்தால் அவரின் முடிவு குறித்துக் குடும்ப உறுப்பினர்கள் சிலர் வியப்படைந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும் வெறும் ஏட்டுக்கல்வி சார்ந்த நடவடிக்கைகள் மட்டுமின்றி பல்வேறு திறன்கள் மூலம் மொழியை ஆழமாக மாணவர்கள் புரிந்துகொள்ள முடிந்ததாக அவர் கூறினார்.
வில்லுப்பாட்டு, கதாகாலட்சேபம் போன்ற கலாசாரம் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடும்போது தமது எண்ணங்களை அவற்றின் மூலம் வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்ததாக அவர் கூறினார்.
இந்நடவடிக்கைகளுக்குத் தலைமைப் பொறுப்பேற்று வழிநடத்தியதை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
தமிழ்மொழி விருப்பப் பாடத்திட்டத்தில் அவரைக் கவர்ந்த அம்சம் கவிதைகள்.
'கழிவறைக் குழந்தைகள்' என்ற கவிதையின் தலைப்பே தன்னை ஈர்த்ததாகவும் அதில் தாய்மை பற்றிய கருத்துகள் தன்னைப் பெரிதும் சிந்திக்க வைத்ததாகவும் தீப்தா குறிப்பிட்டார்.
தமிழ்த் துறையில் பணியாற்றும்
ஆர்வத்தைத் தூண்டியது
மொழித்திறனையும் வாழ்க்கைத் திறனையும் மேம்படுத்த தமிழ்மொழி விருப்பப்பாடம் தனக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்கியதாக ஸ்ருதிகா குமார் தெரிவித்தார்.
கிருமிப்பரவல் சூழலால் பல்வேறு நடவடிக்கைகள் மின்னிலக்கத் தளத்தின் மூலம் நடத்தப்பட்டாலும் அறிவுக்கு விருந்தாக அவை அமைந்ததாக தமிழில் 'எச்2' பாடத்தில் தேர்ச்சி பெற்ற ஸ்ருதிகா கூறினார்.
நாவல்களை நுட்பமாக ஆராய்வதில் இருந்த கடினத்தன்மை, ஆசிரியரின் கற்பித்தல் முறையால் எளிதாகியதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போது தேசிய தொடக்கக்கல்லூரியில் தற்காலிக தமிழ் ஆசிரியராகப் பணிபுரியும் ஸ்ருதிகா, தமிழ்மொழி சார்ந்த வேலையிலேயே சேர விரும்புகிறார்.
தமிழ்மொழி சார்ந்த துறையில் பணியாற்ற விரும்பும் மற்றொரு மாணவியான ரெத்தினம் ரெபேக்கா, இப்பாடத்திட்டத்தின் மூலம் மனித உணர்வுகளின் மேன்மையை உணர்ந்ததாகக் கூறினார்.
"நறுமுகையே என்ற பாடலில் யாயும் ஞாயும் என்ற சங்கப்பாடல் வரிகள் இடம்பெறுகின்றன. இதுபோன்ற திரை இசைப்பாடல்களை ஆராய்ந்தபோது அன்பு என்பதன் பொருள், அதன் ஆழம் ஆகியவற்றை நான் அறிந்தேன். எண்ணத்தில் முதிர்ச்சி தரும் வகையில் இது அமைந்தது," என்று அவர் கூறினார்.
தமிழ் மொழிப் பற்றை வளர்த்தது
நண்பர்களைப் பின்பற்றி சிவசண்முக பிரியா இத்திட்டத்தில் சேர்ந்தார். ஆனால், தமிழ்மொழி ஆர்வலர்களுடன் இணையும் வாய்ப்பை இப்பாடத்திட்டம் பெற்றுத் தந்ததை அவர் நாளடைவில் உணர்ந்தார்.
இந்த ஆர்வலர்கள், தங்களுக்குத் தெரிந்ததை முன்வந்து பகிர்ந்துகொண்டதைத் கண்டு வியந்ததாகக் கூறிய பிரியா, இதனால் தனது சிந்தனை ஆற்றலும் வளர்ந்தது என்றார்.
சிங்கப்பூரில் சிறுபான்மையினர் தனித்தன்மை பெற்று விளங்குவதற்கு தமிழ்மொழி ஆற்றல் கைகொடுக்கிறது என்றார் பிரியா.
கலாசார நடவடிக்கையின் படைப்பாளர் வாய்ப்பைப் பெற்ற பிரியா, வருங்காலத்தில் ஊடகத்துறையில் பணியாற்ற விரும்புகிறார்.
இயந்திரவியலில் நாட்டம் கொண்டுள்ள பாலமுருகன் விஷ்வாவுக்கு கற்பனை ஆற்றலை வளர்த்துக்கொள்ள தமிழ் மொழி கைகொடுத்துள்ளது.
"மற்ற துறைகளில் பொதுவாக ஒரு கேள்விக்கு ஒரு பதில்தான் இருக்கும், ஆனால் தமிழ் மொழி எனும்போது ஒரு கேள்விக்குப் பல பதில்கள் இருக்கக்கூடும்," என்று அவர் பகிர்ந்தார்.
சமூக சிந்தனையை ஏற்படுத்தியது
தமிழ்மொழியை ஆராய்வதில் உள்ள பன்முகத்தன்மையை இத்திட்டத்தின் மூலம் தான் அறிந்துகொண்டதாக தேசிய தொடக்கக் கல்லூரியைச் சேர்ந்த சக்திவேல் மோஹிதா தெரிவித்தார்.
"சங்கத்தமிழ் பாடல்களை வகுப்பறைகளில் ஆராய்வது முதல் குறும்படங்களிள் வழி தற்கால விவகாரங்களை ஆழமாகத் தெரிந்துகொள்வதுவரை பல்வேறு வழிகளில் இலக்கியங்களை ஆராய்ந்தோம்," என்று கணினி, தொழில்நுட்பத் துறையில் எதிர்காலத்தில் பணியாற்ற விரும்பும் மோஹிதா கூறினார்.
இலக்கிய நூல்களின் மூலமாகவும் கலாசார நடவடிக்கைகள் வழி யாகவும் சமூக விவகாரங்களைப் பற்றி ஆழமாகப் புரிந்துகொண்டதில் தான் மனநிறைவு அடைவதாக மருத்துவராக விரும்பும் கணேசாநந்தன் யாழினி கூறினார்.
பல்வேறு விவகாரங்கள் குறித்த தங்களது கருத்துகளைப் படைத்து வெளிப்படுத்தும் வாய்ப்பை இத்திட்டத்தின்மூலம் தான் பெற்றதாக திருநாவுக்கரசு ஹர்ஷினி கூறினார்.