'டிஸ்லெக்சியா' எனப்படும் கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு உதவும் புதிய நிலையம் புக்கிட் மேரா வட்டாரத்தின் ஹெண்டர்சன் பகுதியில் திறக்கப்பட்டுள்ளது. புக்கிட் மேரா வட்டாரத்தில் தொடக்கநிலை, உயர்நிலைப் பள்ளி மாணவர்களிடையே அதிகரித்துவரும் தேவையைச் சமாளிக்க புதிய நிலையம் கைகொடுக்கும்.
முன்னர் குவீன்ஸ்டவுன் தொடக்கப் பள்ளியில் 180 மாணவர்களுக்குச் சேவை வழங்கிய நிலையத்துக்கு பதில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள இந்த நிலையம் 300 மாணவர்களுக்குச் சேவை வழங்கும். சிங்கப்பூர் 'டிஸ்லெக்சியா' சங்கத்தின் ('டிஏஎஸ்') புதிய ஹெண்டர்சன் கற்றல் நிலையம் வசதிகுறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கல்வி உதவி நிதியும் வழங்கவிருக்கிறது.
பழைய நிலையத்தில் 53 விழுக்காட்டுக்கும் அதிகமான மாணவர்களுக்கு நிதியுதவி தேவைப்பட்டது. குறைந்த வருமானக் குடும்ப மாணவர்களுக்குக் கல்வி உதவி நிதி வழங்குவதற்காக, ஆண்டுதோறும் இரண்டு மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான நிதி திரட்டப்பட்டதாக 'டிஏஎஸ்' தெரிவித்தது.
கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களுக்கான புதிய நிலையத்தை அதிபர் ஹலிமா யாக்கோப் நேற்று அதிகாரபூர்வமாகத் திறந்துவைத்தார். 'டிஏஎஸ்' ஜூரோங் பாயிண்ட் கற்றல் நிலையத்தின் முன்னாள் மாணவர் நூ சியஸ்வான் முகமது ஸுல்கர்னைன் வரைந்த ஓவியத்திற்கு நிறைவாக அதிபர் மெருகூட்டினார். இந்த ஓவியம் ஏலத்துக்கு விடப்பட்டு அதன்மூலம் கிடைக்கும் தொகை 'டிஏஎஸ்'க்கு வழங்கப்படும்.
தொடக்கநிலை மூன்றாம் ஆண்டில் படித்தபோது மாணவர் சியஸ்வான் கற்றல் நிலையத்தில் சேர்ந்தார். எளிதான செயல்களையும் தன்னுடன் படிக்கும் மாணவர்களைப் போல செய்யாமல் எரிச்சலடையும் அவருக்கு, நிலையம் மிகவும் பொறுமையாக எல்லாவற்றையும் கற்றுக்கொடுத்ததாக அவர் பகிர்ந்துகொண்டார். சென்ற ஆண்டு உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த அவர், ஏப்ரலில் சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் சேரவிருக்கிறார்.
ஹெண்டர்சன் கற்றல் நிலையத்தைக் கட்டுவதற்கு லீ அறநிறுவனம் ஐம்பதாயிரம் வெள்ளி நன்கொடை வழங்கியது. திறப்புவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் பெரேரா, "கற்றல் குறைபாடு உள்ளிட்ட ஆதரவு தேவைப்படும் பிள்ளைகளின் ஆற்றலை வெளிக்கொணரப் புதிய நிலையம் உதவும்," என்றார்.