சிங்கப்பூர்-மலேசியா நிலவழி எல்லைகள் அண்மையில் திறக்கப்பட்டதை அடுத்து 176,000க்கும் மேற்பட்டோர் அவ்வழியாகப் பயணம் மேற்கொண்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து
ஞாயிற்றுக்கிழமை மாலை வரை மலேசியாவிலிருந்து 56,000 பேர் சிங்கப்பூர் வந்தனர்.
சிங்கப்பூரிலிருந்து 120,000க்கும் மேற்பட்டோர் மலேசியாவுக்குள் நுழைந்தனர்.
இந்தத் தகவலை குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் நேற்று வெளியிட்டது.
இருநாடுகளுக்கிடையிலான நிலவழி எல்லைகள் முழுமையாகத் திறக்கப்பட்டதை அடுத்து தனியார் வாகனங்களுக்கும் பேருந்துச் சேவைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.
கடந்த வாரயிறுதியில் பெரும்பாலான நேரத்தில் எல்லையோர சாலைகளில் போக்குவரத்து சீராக இருந்தது.
அடுத்து வரும் நாள்களில் மேலும் பலர் இருநாடுகளுக்கிடை
யிலான நிலவழிச் சாலைகள் மூலம் பயணம் செய்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போக்குவரத்து நிலவரம், நிலைமை எவ்வாறு கையாளப்படுகிறது, பயணம் செய்வோரின் அனுபவங்கள் ஆகியவற்றைப் பற்றி தெரிந்துகொண்டு பயணம் செய்ய பலர் காத்துக்கொண்டிருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தமது மனைவி இரு பதின்மவயது பிள்ளைகள் ஆகியோரை அழைத்துக்கொண்டு காரில் சென்றார் 48 வயது திரு ஐவன் ராஜு.
"மைசெஜாதரா செயலியில் இருக்கும் பயணப் படிவத்தைப் நாங்கள் பூர்த்தி செய்தோமா என்பதை மலேசிய சுங்கத்துறை அதிகாரி சரிபார்த்தார். அதுதான் ஒரே ஒரு வித்தியாசம்.
"மற்றபடி இரண்டறை ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே நடைமுறைகள் தற்போதும் நடப்பில் உள்ளன," என்று வர்த்தக மேலாளரான திரு ஐவன் ராஜு தெரிவித்தார். மலேசியாவுக்குள் நுழையும் வெளிநாட்டவர்கள் மைசெஜாதரா செயலியில் உள்ள பயணப் படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
ஜோகூர் பாருவிலிருந்து உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி வழியாக திரு ராஜுவும் அவரது குடும்பத்தினரும் சிங்கப்பூர் திரும்பியபோது எஸ்ஜி வரவு அட்டையைப் பூர்த்தி செய்ய மறந்தனர். உடல்நலத்துடன் இருப்பதாக உறுதி செய்ய இணையம் வழி சுகாதாரப் படிவத்தில் அவர்கள் அந்த செயலியின் மூலம் தெரிவிக்க வேண்டும். இது முன்பு நடைமுறையில் இருந்த வெள்ளை அட்டை ஆகும்.
அதை திரு ராஜுவும் அவரது குடும்பத்தினரும் பூர்த்தி செய்ய மறந்ததால் அவர்கள் தனி அறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு அவர்கள் அப்படிவத்தைப் பூர்த்தி செய்த பிறகு சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர்.
"படிவத்தைப் பூர்த்தி செய்யும் செய்முறை மிகவும் எளிதாக இருந்தது. செயலியைப் பதிவிறக்கம் செய்ய அதிகாரி எங்களுக்கு உதவினார். கிட்டத்தட்ட அரைமணி நேரத்தில் படிவத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பித்தோம்.
இப்போது பயண நடைமுறைப் பற்றி நன்கு தெரிந்துகொண்டேன். எனது குடும்பத்தாருடன் கோலாலம்பூர் வரை காரில் செல்ல திட்டமிட்டு வருகிறேன்," என்று திரு ராஜு தெரிவித்தார்.
வெளிநாட்டு வாகனங்கள் இம்மாதம் 7ஆம் தேதி வரை சாலைக் கட்டணம் செலுத்த தேவையில்லை என்று மலேசியா அறிவித்துள்ளது. டச் ஆண்ட் கோ அட்டை மூலம் செலுத்த வேண்டிய கட்டணத்தையும் மலேசியா தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.