பூன் லே டிரைவில் புதன்கிழமை பிற்பகல் (ஏப்ரல் 6) நிகழ்ந்த ஆயுதம் ஏந்திய தாக்குதலில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் ஆடவர்கள் இருவர் நேற்று சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு காவல்துறை அதிகாரிகளால் அழைத்துச்செல்லப்பட்டனர்.
திருமண ஊர்வலத்தில் கலந்துகொண்ட 22, 23 வயதுடைய இரு ஆடவர்களைத் தாக்கிவிட்டு அந்தச் சந்தேக நபர்கள் தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. அதிகாரிகளின் தேடுதல் வேட்டைக்குப் பிறகு அவ்விருவரும் நேற்று முன்தினம் பிற்பகல் உட்லண்ட்ஸ் ஸ்திரீட் 12ல் கைது செய்யப்பட்டனர்.
தாக்கப்பட்ட அவ்விரு ஆடவர்களும் திரு இமானுவல் ரவி, 26, என்பவரின் நெருங்கிய நண்பர்கள். திரு ரவியின் வீட்டிற்கு அருகே இந்தத் தாக்குதல் அரங்கேறியதால் அன்றைய தினம் அவரது திருமண நிகழ்வுகளுக்கு இடையூறு ஏற்பட்டது.
நேற்று மாலை 4.15 மணியளவில், புளோக் 177 பூன் லே டிரைவில் உள்ள கார் நிறுத்துமிடத்துக்கு அந்தச் சந்தேக ஆடவர்களுடன் காவல்துறையினர் வந்தடைந்தனர்.
சம்பவ இடத்தைப் பார்வையிட அவ்விருவரும் காவல்துறை வாகனத்தைவிட்டு தனித்தனியாக அழைத்துச்செல்லப்பட்டனர். அவர்களின் கைகளும் கால்களும் வார்களால் கட்டப்பட்டிருந்தன. ஐந்து காவல்துறை விசாரணை அதிகாரி களுடன் அந்தப் பகுதியைச் சுற்றி அந்த ஆடவர்கள் நடந்து சென்றனர்.
அவ்விருவரும் வெள்ளை சட்டை, நீல காற்சட்டை, செருப்பு அணிந்திருந்தனர். கை, கால், கழுத்தில் அவர்கள் பச்சை குத்தியிருந்தனர்.
கார்நிறுத்திடத்தில் 72வது தடத்தில் காணப்பட்ட ரத்தக்கறையைக் காட்டி காவல்துறை புலனாய்வு அதிகாரிகள் ஆடவர்களிடம் விசாரணை நடத்தினர்.
சம்பவ இடத்தில் விசாரணை நடத்தப்பட்ட பிறகு காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், பொது நோக்கத்துடன் ஆபத்தான ஆயுதங்களால் வேண்டுமென்றே கடுமையான காயத்தை ஏற்படுத்தியதாக அந்த இருவர் மீதும் இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு ஆயுள் தண்டனையோ அல்லது அபராதமும், பிரம்படியும் விதிக்கப்படலாம்.
கடந்த புதன்கிழமை மாலை 5 மணியளவில், பூன் லே டிரைவ் புளோக் 175ல் நடந்த சம்பவம் பற்றி காவல்துறைக்கு பல தொலைபேசி அழைப்புகள் வந்தன. "சம்பவத்தில் தாக்கப்பட்ட இருவரின் தலைகளிலும் கால், கைகளிலும் பல கத்தி வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன என்று ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது," என்று குறிப்பிட்ட காவல்துறை அவர்கள் இருவரும் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்றது.
தாக்குதல் நடத்திய ஆடவர்கள், காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வருவதற்கு முன், இருவர் அந்த இடத்திலிருந்து தப்பித்து, பின்னர் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை வீசி எறிந்து விட்டனர் என்றும் கூறப்பட்டது.
ஸ்ட்ரெயிட்ஸ் டைம்சிடம் நேற்று பேசிய மணப்பெண் யுரோஷினி ஜோசஃபின், 25, "நானும் திரு இமானுவலும் எங்கள் திருமணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தபோது, தனது நண்பர்கள் இருவர் தாக்கப்பட்ட தகவலை எனது கணவர் என்னிடம் கூறினார். நான் பதற்றத்துடன் வீட்டிலிருந்து கிளம்பி, கீழே சென்று விட்டேன்," என்றார்.
தாக்குதலுக்கு ஆளான திரு பிரவீன் ராஜும் திரு சரண்குமாரும் தனது நண்பர்கள் என்றும் அவர்கள் அடிக்கடி தனது வீட்டுக்கு வருவார்கள் என்றும் திரு இமானுவல் தெரிவித்தார். தாக்குதலுக்கு ஆளான இருவரும் தனது 'மகன்கள்' போன்றவர்கள் என்றார் இமானுவலின் தாயாரான 50 வயது திருமதி மான்விழி.