புலம்பெயர்ந்து வரும் பறவைகள் இரவில் விண்மீன்களை அடிப்படையாகக்கொண்டே அவற்றின் பயணத் தடங்களை அமைத்துக்கொள்வது வழக்கம். ஆனால் நகர்ப்புறங்களில் செயற்கையாக ஒளியூட்டப்பட்ட கட்டடங்களின் மாறுபட்ட ஒளியால் குழப்பமடையும் இந்தப் பறவைகள் அவற்றில் பரிதாபமாக மோதிக்கொள்கின்றன.
2017ல் சிங்கப்பூரில் நடத்தப்பட்ட ஆய்வில், 1998க்கும் 2016க்கும் இடைப்பட்ட காலத்தில் 237 புலம்பெயர்ந்த பறவைகள் இவ்வாறு மோதிக்கொண்டது கண்டறியப்பட்டது. அவற்றில் 157 பறவைகள் உயிரிழந்துவிட்டன.
இத்தகைய அசம்பாவிதத்தைத் தவிர்க்க தேசியப் பூங்காக் கழகம் புதிய வழிகாட்டிக் குறிப்புகளை வெளியிட்டுள்ளது.
கட்டட முகப்பு அமைப்புகள், உள்ளரங்கப் பகுதிகள் தொடர்பான நடவடிக்கைகள் ஆகியவற்றுடன் கண்காணிப்புத் திட்டத்தை உருவாக்குவது என மூன்று அம்சங்களில் இவை கவனம்செலுத்துகின்றன.
கண்ணாடி முகப்புகள் ஆகாயத்தையும் சுற்றியுள்ள தாவரங்களையும் பிரதிபலிப்பதால் பறவைகளுக்கு அந்த இடம் இயற்கைச் சூழலின் தொடர்ச்சி என்ற தவறான புரிதல் ஏற்படக்கூடும்.
இதைத் தவிர்க்க, கட்டடங்களின் உள்புறம் திரைச்சீலைகளைப் பயன்படுத்தலாம்; அல்லது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தானியக்க முறையில் இரவில் விளக்குகளின் ஒளியைக் குறைக்கலாம்; கண்ணாடிப் பரப்புகளில் ஒட்டுவில்லைகளைப் பயன்படுத்தலாம் என்பதுபோன்ற குறிப்புகள் பரிந்துரைக்கப்பட்டு உள்ளன.