கொவிட்-19 தடுப்பூசிக்குப் பிறகு இதயத் தசையில் வீக்கம் ஏற்படும் அபாயம் மிகவும் குறைவு என்று சிங்கப்பூரில் நடத்தப்பட்ட புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொவிட்-19 தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஒரு மில்லியன் பேரில் 18 பேருக்கு மட்டுமே இத்தகைய சிக்கல் ஏற்படக்கூடும் என்று ஆய்வு கூறியது.
மற்ற நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போட்டுக்கொள்ளும்போது ஏற்படும் இதயத் தசை வீக்கத்தைவிடவும் இது குறைவு என்று ஆய்வு குறிப்பிட்டது.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக இதய சிகிச்சை நிலையத்தின் மூத்த மருத்துவர் டாக்டர் கொலெங்கோட் ராமநாதனின் தலைமையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
உலக அளவில் 400 மில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டது தொடர்பான தரவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இருப்பினும் இதனை முழுமையான ஆய்வாகக் கருத முடியாது.
ஏனெனில் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் அண்மையில்தான் தடுப்பூசிக்குத் தகுதிபெற்றனர்.
எனவே அவர்களைப் பற்றிய மிகக் குறைவான தகவல்களே ஆய்வில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன.
இதயத் தசை வீக்கத்தால் சில நோயாளிகளுக்கு இதயம் மிக மோசமாக சேதமடைவதுண்டு.
பெரும்பாலும் கிருமிகளால் ஏற்படக்கூடிய இந்த நோய், தடுப்பூசி செலுத்திக்கொண்டபின் அரிதாகச் சிலரை பாதிக்கக்கூடும்.