சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த சில முன்களப் பணியாளர்களுக்கும் அமலாக்க அதிகாரிகளுக்கும் சீருடையில் அணியக்கூடிய கேமராக்கள் வழங்கப்படும். இந்த அணுகுமுறை நாளை முதல் நடப்புக்கு வரும்.
இதுதொடர்பான முன்னோட்டம் 2015ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட சில அதிகாரிகள் தங்கள் தலைக்கவசத்திலும் சீருடையிலும் கேமராக்களை அணிந்துகொண்டனர்.
2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கும் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் மருத்துவ உதவியாளர்களும் முன்னோட்டத் திட்டத்தில் பங்கேற்றனர்.
முன்னோட்டத்துக்குப் பிறகு நடத்தப்பட்ட ஆய்வில் சீருடையில் கேமரா அணிவது பலன் அளிப்பது தெரியவந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. அதிகாரிகள் பணி நிமித்தம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மறுஆய்வு செய்யவும் விசாரணைகளை நடத்தவும் இத்திட்டம் கைகொடுப்பதாக தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு மற்றும் மீட்பு நிபுணர்கள், மருத்துவ உதவியாளர்கள், அபாயகரமான பொருள்களை கையாளும் வல்லுநர்கள், கண்காணிப்பு மற்றும் அமலாக்க அதிகாரிகள் ஆகியோர் தங்கள் சீருடையில் கேமரா அணிந்துகொள்வர் என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் பயிற்சி அளிப்பதற்குப் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது, அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்பில் வெளிப்
படைத்தன்மை இருக்கும் என்று வலியுறுத்தப்படுகிறது.
அதிகாரிகள் தாக்கப்படுவது அல்லது வார்த்தைகளால் இழிவுப்படுத்தப்படுவதை இத்திட்டம் தடுக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆறு ஆண்டுகள் இல்லாத அளவில் சென்ற ஆண்டில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் பலருக்குத் தொல்லை விளைவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டில் மட்டும் 29 தொல்லை விளைவிக்கும் சம்பவங்கள் நிகழ்ந்தன.
நாளடைவில் அதிகாரிகள் தங்கள் சீருடையில் அணிந்திருக்கும் கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் செயல்பாட்டு நிலையத்துடன் நேரடியாக இணைக்கப்படும்.
கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் 90 நாள்களுக்குப் பிறகு நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. தகுந்த காரணம் இருந்தால் மட்டுமே 90 நாள்களுக்கும் பிறகும் சில பதிவுகள் நீக்கப்படாமல் வைக்கப்பட்டிருக்கும்.