கோ பூன் வான் விளக்கம்: மூன்று வார கால முயற்சி; 19 தலைவர்களுடன் தனித்தனியாக சந்திப்பு; பேட்டி
மக்கள் செயல் கட்சியின் 4ஆம் தலைமுறைத் தலைவராக நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார்.
திரு வோங் அந்தப் பொறுப்புக்கு எப்படி தேர்ந்து எடுக்கப்பட்டார் என்பதைக் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் அமைச்சருமான திரு கோ பூன் வான் நேற்று செய்தியாளர்களிடம் விவரித்தார்.
நான்காம் தலைமுறைத் தலைவரைத் தேர்ந்து எடுக்கும் நடைமுறைக்குப் பொறுப்பு ஏற்கும்படி என்னை பிரதமர் லீ சியன் லூங் கேட்டுக்கொண்டார். தலைவரை முடிவு செய்யும் அதே நேரத்தில் 4ஆம் தலைமுறை தலைவர்களை ஐக்கியமாக்கும் வழியையும் காணுமாறு என்னிடம் திரு லீ கூறினார்.
அமைச்சர்களின் ஆக அதிக ஆதரவு யாருக்கு இருக்கிறது என்பதை மதிப்பிடுவது மட்டும் என் வேலை அல்ல. கருத்திணக்கத்தைப் பேணி, 4ஆம் தலைமுறைக் குழுவை ஐக்கியமாக்கும் வகையில் அதைச் செய்யும்படி என்னிடம் பிரதமர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் மார்ச் மாதம் வரவுசெலவுத் திட்ட விவாதம் முடிந்த உடனேயே நான் செயலில் இறங்கினேன். அமைச்சர்களுடன் தனித்தனியாக பேசினேன். ஒவ்வொருவரையும் ஒரு மணி நேரம் பேட்டி கண்டேன். இவை எல்லாம் முடிய மூன்று வாரகாலம் ஆகியது.
4ஆம் தலைமுறைத் தலைவர் பொறுப்புக்கு வாய்ப்பு உள்ள ஒவ்வொருவரின் பலம், பலவீனத்தைப் பற்றி வெளிப்படையாக, நேரடியாக விவாதித்தேன். இதற்கு வழி வகுக்கும் விதத்தில் குழுவைப் பலப்படுத்தும் அணுகுமுறையைக் கைக்கொண்டேன்.
சிங்கப்பூருக்குத் தலைமை ஏற்கும் வகையில், ஐக்கியத்தை மேம்படுத்தி, வலுவான 4ஆம் தலைமுறைக் குழுவை உறுதிப்படுத்துவதே பொதுவான நோக்கம்.
முன்னாள் 4ஆம் தலைமுறை அமைச்சர்களான நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின், என்டியுசி தலைமைச் செயலாளர் இங் சீ மெங், துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், ஆகியோரோடும்;
டாக்டர் இங் எங் ஹென், டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், கா சண்முகம், கான் கிம் யோங், எஸ் ஈஸ்வரன், திருவாட்டி கிரேஸ் ஃபூ, சான் சுன் சிங், லாரன்ஸ் வோங், மசகோஸ் ஸுல்கிஃப்லி, ஓங் யி காங், டெஸ்மண்ட் லீ, ஜோசஃபின் டியோ, இந்திராணி ராஜா, டாக்டர் மாலிக்கி ஒஸ்மான், எட்வின் டோங், டாக்டர் டான் சீ லெங் ஆகிய அமைச்சர்களோடும் பேசினேன்.
தெரிவிக்கப்படும் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் ஒட்டுமொத்தமான முடிவு மட்டும் தெரிவிக்கப்பட வேண்டியவர்களுக்கு மட்டும் அனாமதேய முறையில் தெரியப்படுத்தப்படும் என்றும் பேட்டி காணப்பட்டவர்களிடம் நான் உறுதிபட தெரிவித்தேன்.
தலைவர் பதவிக்குத் தங்களை விடுத்து வேறு யார் யாரை ஆதரிக்கிறீர்கள் என்பதை வரிசைப்படுத்தி தெரிவிக்கும்படி அவர்களைக் கேட்டுக்கொண்டேன்.
சிங்கப்பூர் மீது உறுதியான கடப்பாட்டைக் கொண்டுள்ள, சிங்கப்பூரர்கள், சகாக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான, சகாக்களின் ஆதரவைப் பெற்றுள்ள, அணியினரை ஐக்கியப்படுத்தி நாட்டுக்குச் சேவையாற்றும் வகையில் ஆக அதிக ஆற்றலைக் கொண்டுள்ள ஒருவரைத் தேர்ந்தெடுப்பதில் தலைவர்கள் உறுதியாக இருந்தனர்.
மற்றவர்களை எல்லாம் ஐக்கியப்படுத்தி, தேர்தல்களில் வெற்றியைச் சாதிக்க வேண்டும் என்பதை மனதில் நிறுத்தி நீங்கள் யாரை உங்கள் தலைவராகத் தேர்ந்து எடுப்பீர்கள் என்று கேட்டேன்.
பேட்டி கண்ட 19 பேரில் 15 பேர் நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங்தான் தங்கள் முதல் தேர்வு என்று வாக்கு அளித்தார்கள். இதில் வேறு யாருக்கும் இரண்டு வாக்கு களுக்கு மேல் கிடைக்கவில்லை.
4வது அணியினர் தங்கள் தலைவர் யார் என்பதை தெள்ளத்தெளிவாக முடிவு செய்துவிட்டனர்.
ஆகையால் இதில் இரண்டாம் இடத்திற்கு, மூன்றாம் இடத்திற்கு வந்தது யார் என்பதைப் பற்றி பேச வேண்டிய தேவை எதுவும் இல்லை.
லாரன்ஸ் வோங்தான் முதல் விருப்பம் என்பது அறுதிப் பெரும்பான்மையுடன் முடிவாகிவிட்டது என்று திரு கோ பூன் வான் தெரி வித்தார்.