நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (என்டியு) புதிய இரண்டு ஆய்வுக்கூடங்களை அமைத்து இருக்கிறது.
பசுமைத் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தும் புது நிறுவனங்கள் ஆய்வு உருவாக்கத்தில் இருந்து வர்த்தகத்திற்கு விரிவடைய அந்த ஆய்வுக்கூடங்கள் மூலம் உதவி கிடைக்கும்.
அந்த இரண்டு ஆய்வுக்கூடங்களும் ஜூ கூனில் உள்ள 'ஜேடிசி கிளீன்டெக் ஒன்' கட்டடத்தில் அமைந்து இருக்கின்றன.
புதிய நிறுவனங்களுக்கும் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கும் ஆய்வுக்கூடங்கள் உதவும்.
அந்த உதவியைப் பெற்று அந்த நிறுவனங்கள் தங்களுடைய தொழில்நுட்பங்களைப் பரிசோதித்து பார்க்கலாம், சீரமைத்துக்கொள்ளலாம். பெரிய நிறுவனங்களுடன் இணைப்பை ஏற்படுத்தித் தந்து அதன் வழி நிறுவனங்கள் மேம்பட அந்த ஆய்வுக்கூடங்கள் உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் நேற்று அறிக்கை ஒன்றில் இந்த விவரங்களைத் தெரிவித்தது. புதிய இரண்டு ஆய்வுக்கூடங்களும் சென்ற ஆண்டு செயல்படத் தொடங்கின.
என்டியு, எண்டர்பிரைஸ் சிங்கப்பூர், சிங்கப்பூர் நிலையான எரிசக்தி சங்கம் ஆகிய அமைப்புகளுக்கு இடைப்பட்ட ஒரு கூட்டு முயற்சியான எரிசக்திக்கான புத்தாக்க, சுற்றுச்சூழல் ஆய்வுக்கூட நிலையச் செயல்திட்டத்தின்கீழ் நேற்று அந்த இரண்டு ஆய்வுக்கூடங்களும் தொடங்கப்பட்டன.
வர்த்தக, தொழில் துணை அமைச்சர் லோ யென் லிங் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
உக்ரேன் போர் போன்ற அண்மைய சம்பவங்கள் காரணமாக எண்ணெய் விலை ஏறி இருக்கிறது. சிங்கப்பூர் மாற்று எரிபொருள் வழிகளைத் தேட வேண்டும் என்ற தேவையை அது வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது என்று அமைச்சர் லோ குறிப்பிட்டார்.