கடந்த சுமார் 20 ஆண்டுகளில் 1,700க்கும் அதிகமான மோசமாக நோய்வாய்ப்பட்ட பிள்ளைகளின் ஆசைகளைப் பூர்த்திசெய்துள்ளது 'மேக்-ஏ-விஷ்' எனப்படும் 'ஆசைகளைச் சொல்' என்ற இயக்கம்.
நேற்று 'வோர்ல்டு விஷ் டே' என்றழைக்கப்படும் உலக ஆசைகள் தினம். அதையொட்டி மேலும் 2,000 ஆசைகளைப் பூர்த்திசெய்யும் இலக்கை 'மேக்-ஏ-விஷ்' கொண்டுள்ளது. கூடுதலான மோசமாக நோய்வாய்ப்பட்டுள்ள சிறுவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் உதவுவது இந்த இயக்கத்தின் நோக்கம்.
2,000 ஆசைகளைப் பூர்த்திசெய்வதற்கான கால அவகாசத்தை இயக்கம் நிர்ணயிக்கவில்லை.
'மேக்-ஏ-விஷ்' அதன் இலக்கை அடைய உதவ சிங்கப்பூரின் மின்னிலக்க ஊடக நிறுவனமான 'எஸ்கேக்' இவ்வாண்டு அதனுடன் இணைந்து செயல்படுகிறது. உதவி தேவைப்படக்கூடிய பிள்ளைகளை இந்த இயக்கத்திற்குப் பரிந்துரைக்குமாறு சிங்கப்பூரர்களை ஊக்குவிக்க 'எஸ்கேக்', சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்ய காணொளிகளைத் தயாரிப்பது போன்ற முயற்சிகளை மேற்கொள்ளும்.
"அமைப்பு மூலம் நோய்வாய்ப்பட்ட பிள்ளைகளின் ஆசைகள் பூர்த்திசெய்யப்படும்போது அவர்களின் வாழ்க்கை எவ்வாறு பெரிய அளவில் மாறக்கூடும் என்பது குறித்த விழிப்புணர்வை வளர்க்கும் எண்ணம் கொண்டுள்ளோம், மோசமாக நோய்வாய்ப்பட்ட பிள்ளைகளுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் மீண்டும் நம்பிக்கை வரவழைக்கும் பயணத்தில் நாங்களும் இடம்பெற விரும்புகிறோம்," என்று 'எஸ்கேக்'கின் பொது நிர்வாகி திருவாட்டி மிஷெல் டான் கூறினார்.