இளம் பிள்ளைகளுக்காக அவரவர் தாய்மொழியிலேயே உருவாக்கப்பட்ட உள்ளூர் படப் புத்தகங்கள் அண்மைய ஆண்டுகளாக அதிகரித்து வருகின்றன. ஆரம்ப வயது முதல் ஆங்கில மொழிக்கும் அப்பால் வாசிப்பை ஊக்குவிப்பதற்காக உள்ளூர் எழுத்தாளர்கள் முயன்று வருகின்றனர்.
பாலர் பள்ளி மாணவர்கள் நன்கறிந்த மொழிநடை, காட்சிகள் போன்றவற்றைக் கொண்டு உள்ளூர் சூழலில் அமைந்துள்ள இந்தப் புத்தகங்கள் தனித்தன்மை வாய்ந்தவையாக விளங்குகின்றன.
பாலர் பள்ளி நிறுவனமான 'பிசிஎஃப்' கடந்த ஆண்டு 20 தாய்மொழிப் புத்தகங்களை வெளியிட்டது. அவற்றில் பெரும்பாலானவை தமிழ், மலாய் மொழிகளில் அமைந்தவை.
நிறுவனத்தின் தாய்மொழி நிபுணர்களின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட அந்தப் புத்தகங்கள், பாலர் பள்ளியின் பாடத்திட்டத்தில் ஓர் அங்கமாக இடம்பெறுகின்றன.
தமிழ், மலாய் மொழிகளில் பாலர் பள்ளி மாணவர்களுக்கு ஏற்ற புத்தகங்கள் அதிகம் இல்லாததால், இவ்வாறு இரு மொழிகளிலும் அதிகமான புத்தகங்களை வெளியிட்டதாக நிறுவனம் தெரிவித்தது.
படப் புத்தகங்களை வாசிக்கத் தொடங்குவதற்கு முன்பாக அவற்றில் உள்ள படங்களைக் கொண்டு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் உரையாடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.