ஆ. விஷ்ணு வர்தினி
கொள்ளைநோய்ச் சூழலால் உலகமே ஆட்டங்கண்டிருந்த வேளையில் அதிலிருந்து சமூகம் மீள்வதற்கான பணியில் ஈடுபடும் வாய்ப்பை இளையர் சமீமா பேகம் பெற்று உள்ளார்.
உயிர்தொழில்நுட்பத் துறையில் இருந்த இவர், சிங்கப்பூரின் முதல் கொவிட்-19 பரிசோதனைக் கருவிகளை உருவாக்கிய குழுவில் இடம்பெற்றார்.
ஆரம்ப காலத்திலேயே புற்றுநோயைக் கண்டறிவதற்கான சிங்கப்பூர் 'ஆர்என்ஏ' நோய் அறிதல் உற்பத்தித்திறன்களையும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் கொண்ட 'மிர்க்செஸ்' (MiRXES) குழுவில் சமீமா பணியாற்றினார்.
உயிர்தொழில்நுட்ப நிறுவனமான மிர்க்செஸ், 'ஃபோர்ட்டிடியூட் கிட் 2.0' (Fortitude Kit 2.0) என்ற நோயறியும் தயார்நிலை பரிசோதனைக் கருவி உருவாக்கத்தில் பங்காற்றியது.
வாரத்தில் ஏழு நாள்கள் மிர்க்செஸ் மருத்துவ ஆய்வகமான 'எம்டைக்னோஸ்டிக்ஸ்'ஐ தொடர்ச்சியாகச் செயல்பாட்டில் வைத்திருப்பதிலும் சமீமா பங்காற்றினார்.
வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்புவோர், தங்களுக்குக் கிருமித்தொற்று இல்லை என்பதை கொவிட்-19 பரிசோதனையை மேற்கொண்டு உறுதிசெய்யும் நடைமுறை இருந்தபோது 'ஹெல்த்செர்ட்ஸ்' எனப்படும் சுகாதார மின் சான்றிதழை வழங்கும் அங்கீகாரம் 'எம் டைக்னோஸ்டிக்ஸ்'க்கு அளிக்கப்பட்டது.
இவ்வாறு வெவ்வேறு நாடுகளுக்குப் பயணிகள் செல்வதற்கும் கொவிட்-19 சூழலுக்கிடையே உலகம் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கும் தான் ஒருவகையில் பங்காற்றியுள்ளது தனக்கு மனநிறைவை அளிப்பதாகக் கூறினார் இவர்.
2015ல் டீகின் பல்கலைக்கழகத்தின் உயிரியல் மருத்துவ அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார் சமீமா.
அதையடுத்து 2020ல் மிர்க்செஸில் மருத்துவத் தொழில்நுட்ப நிபுணராக அவர் இணைந்தார்.
மருத்துவத் துறையில் பணியாற்றவேண்டும் என்பது சமீமாவின் நீண்ட நாள் கனவாக இருந்து வந்தது.
அதிநவீன தொழில்நுட்பமானது மருத்துவத்துறைக்கு எவ்வளவு அவசியம் என்று உணர்ந்தபின், மருத்துவத் தொழில்நுட்பத் துறையைத் தேர்ந்தெடுத்தார் சமீமா.
"பிடித்த வேலையைச் செய்தால் வாழ்வில் ஒருநாளும் வேலை செய்வது போன்றே இருக்காது என்று சிலர் கூறுவர். அதற்கேற்ப நான் வாழ முயற்சி செய்கிறேன். நான் என் வேலையை ஒவ்வொரு நாளும் ரசித்துச் செய்கிறேன்.
"என் பணி மூலம் பல உயிர்களைக் காப்பாற்றி, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த நான் பங்காற்றுகிறேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது," என்றார் சமீமா.
கொவிட்-19க்கு எதிராக முன்களத்தில் போராடிய மருத்துவர்கள், தாதியர்போல் தன்னைப் போன்ற மருத்துவத் தொழில்நுட்ப நிபுணர்களும் முக்கியப் பங்காற்ற முடியும் என்று தான் உணர்ந்துள்ளதாக இவர் கூறினார்.
உலகம் நாளுக்கு நாள் மாறிவர, எதிர்காலத்திற்கு ஏற்பத் தனது திறன்களை மேம்படுத்திக்கொள்வதில் தான் கவனம் செலுத்த விரும்புவதாகத் தெரிவித்தார் சமீமா.