கி. ஜனார்த்தனன்
'மாற்றங்கள் ஏற்போம்: நமது சவால்களும் தெரிவுகளும்' என்ற கருப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் தொடக்கக் கல்லூரி மாணவர்கள் நேற்று முன்தினம் காலை பங்கேற்று பலனடைந்தனர்.
ஈசூன் இனோவா தொடக்கக் கல்லூரியின் கலாசார, முருகியல் மன்றம், பல்கலைக்கழக புகுமுக வகுப்புகளுக்கான தமிழ்மொழி, இலக்கிய கருத்தரங்கை 33ஆம் ஆண்டாக நடத்தியிருந்தது.
இந்த மெய்நிகர் நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 90 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
21ஆம் நூற்றாண்டில், குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்த சிற்றுரையையும் ஆய்வுகளையும் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மாணவர்கள் பகிர்ந்துகொண்டனர்.
மாற்றங்கள் எத்தகையவை, அவற்றை ஏற்பதாலும் ஏற்காமல் இருப்பதாலும் உள்ள நன்மை தீமைகள் யாவை, மாற்றங்களைச் சிறப்பாகக் கையாள்வதற்கான பரிந்துரைகள் போன்றவை பேசப்பட்டன.
தொலைநோக்குப்பார்வை, புரிந்துணர்வு ஆகியவை நல்ல மாற்றங்களுக்குத் தேவையான பண்புகள் எனக் கூறப்பட்டது.
மொத்தம் 181 மாணவர்கள் பங்கேற்ற ஆய்வு ஒன்றின் முடிவுகளும் கருத்தரங்கின்போது வெளியிடப்பட்டன.
கொவிட்-19 கிருமிப்பரவலே தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட ஆகச் சவாலான மாற்றம் என்று மாணவர்களில் 88.4 விழுக்காட்டினர் ஆய்வில் தெரிவித்திருந்தனர்.
சமூக ஊடகங்களில் காணொளிகள் பதிவு செய்து வரும் மனநல மருத்துவர் என்.ஷாலினி, மாற்றங்களைப் பற்றிக் கருத்து தெரிவித்தார்.
கிருமிப்பரவல் காலகட்டத்தின் முடிவு, போரின் முடிவு, சமூகக் கட்டமைப்பில் மாற்றம் எனச் சமுதாயத்தில் உள்ள பொதுவான மாற்றங்களையும் உடல், உள ரீதியான மாற்றங்களையும் பற்றி அவர் விளக்கினார்.
இளமைப்பருவம் போனால் திரும்ப வராது. இதற்கிடையே, பல தரப்பினரும் அவரவரது சொந்த நோக்கத்திற்காக இளையர்களைப் பயன்படுத்திக்கொள்ள முயலலாம்.
இந்நிலையைச் சரியாக ஆராய்ந்து இளையர்கள் முடிந்தவரை நேர விரயத்தை தவிர்ப்பது நல்லது என்று அவர் கூறினார்.
இளையர்களின் மனதில் நிம்மதியைக் காட்டிலும் ஆழமாகப் பதிவது தவிப்பே என்றும் அவர் சுட்டினார்.
நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்புப் பேச்சாளராக பாடலாசிரியர் திரு யுகபாரதி கலந்துகொண்டார். நல்ல மாற்றத்திற்கு அன்பும் நம்பிக்கையும் தேவைப்படுவதாக அவர் கூறினார்.
கதைகளையும் பாடல் வரிகளையும் மேற்கோள் காட்டிய அவர், மாற்றங்களை ஏற்படுத்த விரும்புவோர் நல்ல பண்பாளர்களாக முதலில் இருக்கவேண்டும் என்று கூறினார்.
வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை ஏற்கக் கற்றுக்கொள்ளவேண்டும், கற்றுக்கொள்வோம் என்ற கடப்பாட்டை மாணவர்கள் உறுதிசெய்தவாறு கருத்தரங்கு நிறைவை நாடியது.