நீக்குப்போக்கான வேலை ஏற்பாடு நிரந்தரமாக வேண்டும் என்று பல ஊழியர்கள் விரும்புகிறார்கள்.
அதேவேளையில், கொரோனா தொற்று முடிந்த பிறகும் தொடர்ந்து நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்த பெரும்பாலான முதலாளிகள் நாட்டத்துடன் இருக்கிறார்கள் என்பது மனிதவள அமைச்சு நடத்திய ஆய்வு மூலம் தெரியவந்து இருக்கிறது.
மனிதவள துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை இது பற்றி தெரிவித்தார்.
அத்தகைய ஏற்பாடுகளால் முதலாளிகளுக்கும் ஊழியர்களுக்கும் நன்மை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
மனிதவள அமைச்சு, சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனம், தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் ஆகிய முத்தரப்பு அமைப்புகள் சென்ற மாதம் அறிக்கை ஒன்றை விடுத்தன.
வீட்டில் இருந்தபடியே வேலை பார்ப்பது, ஊழியர்கள் வேலைக்கு வந்து போகும் நேரத்தை மாற்றியமைப்பது போன்ற நடைமுறைகள் வேண்டும் என்று அந்த அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.
இது பற்றி நாடாளுமன்றத்தில் பேசிய துணை அமைச்சர் திருவாட்டி கான், நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகள் செம்மையான முறையில் நிரந்தர ஏற்பாடாக ஆக வேண்டுமானால் அதற்கு முதலாளி களுக்குப் போதிய காலஅவகாசமும் ஆதரவும் தேவை என்று குறிப்பிட்டார். உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், வரும் ஆண்டுகளில் முத்தரப்பு பங்காளி அமைப்புகள் நிறுவனங்களுக்குப் பயிற்சிகளை தீவிரப்படுத்தும் என்று குறிப்பிட்டார்.
இதன் மூலம் அவை இத்தகைய ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்த முடியும் என்றும் மனிதவளம், வேலை மறுவடிவமைப்பு போன்ற துறைகளில் எல்லாருக்கும் வெற்றி கரமான ஒரு சூழலை தொடர்ந்து நிரந்தரமாக அமல்படுத்தி வர முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்த ஆதரவு அளிக்கும் வகையில் வேலை-வாழ்க்கை நல்லிணக்கத் தூதர்களையும் இதில் ஈடுபடுத்தப்போவதாக அமைச்சர் தெரிவித்தார். வேலை, வாழ்க்கை இரண்டுக்கும் இடையில் நல்ல இணக்கத்தை ஊழியர்கள் காண்பதற்கு அவர்கள் உதவுவார்கள்.
நீக்குப்போக்கான வேலை ஏற்பாடு பற்றிய முத்தரப்புத் தரங்களை அதிக நிறுவனங்கள் பின்பற்றும் வகையில் முயற்சிகள் இடம்பெறும் என்றும் திருவாட்டி கான் குறிப்பிட்டார்.
இதில் அரசாங்கச் சேவை முன்னின்று வழிகாட்டுவதாகவும் அவர் கூறினார்.
அந்தத் தர வழிகாட்டி நெறிமுறைகளின்படி நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளுக்கான கோரிக்கைகளை முதலாளிகள் நியாயமாகவும் முறையாகவும் பரிசீலிக்க வேண்டியிருக்கும்.