பொறியியல், தொழில்நுட்பத் துறைகளுக்கான கல்வி அமைச்சின் உதவிக்கரம்
கணிதம், பொறியியல் போன்ற துறைகளில் ஆர்வம் உடைய பல்கலைக்கழக புகுமுக மாணவர்கள் அடுத்த ஆண்டில் இருந்து புதிய கல்வி உபகாரச் சம்பளத்திற்கு விண்ணப்பிக்கலாம். ஒவ்வோர் ஆண்டும் இதனால் 200 மாணவர்கள் பயனடைவர் என்று கல்வி அமைச்சு தெரிவித்தது.
சிங்கப்பூரில் பொறியியல், தொழில்நுட்பத் திறனாளர்களை அதிகரிப்பது அமைச்சின் நோக்கம்.
கல்வி அமைச்சர் சான் சுன் சிங் நேற்று இதனை அறிவித்தார். இதன் தொடர்பில் சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகத்திற்கும் பிரிட்டனைச் சேர்ந்த முதலீட்டாளர் தொடங்கியுள்ள ஜேம்ஸ் டைசன் அறநிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வுக் குறிப்பு கையெழுத்தான நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.
'ஸ்டெம்' எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதக் கல்வி சிங்கப்பூர்ப் பள்ளிகளின் பாடத்திட்டத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். இந்தத் துறைகளில் வேலைபார்ப்போர் மட்டுமின்றி இதன் மூலம் பெற்ற அறிவைக் குடிமக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் சில முடிவுகளை எடுப்பதற்கும் இத்தகைய கல்வி உதவுவதாக அவர் கூறினார்.
புதிய ஈராண்டுக் கல்வி உபகாரச் சம்பளத்தின்கீழ் ஆண்டுக்கு அதிகபட்சமாக 2,400 வெள்ளி வழங்கப்படும்; இது பள்ளிக் கட்டணத்தை முழுமையாகக் கட்ட உதவும். அத்துடன் பாடப் புத்தகங்கள் வாங்குவதற்காக ஆண்டுக்கு ஆயிரம் வெள்ளியும் வழங்கப்படும்.
தொடக்கக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மில்லெனியா கல்விக் கழக மாணவர்கள் தங்கள் இரண்டாம் ஆண்டில் இந்த உபகாரச் சம்பளத்திற்கு விண்ணப்பிக்கலாம். 'ஐபி' பாடத்திட்டம், 'என்யுஎஸ் ஹைஸ்கூல்' மாணவர்கள் இறுதி இரண்டு ஆண்டுகளில் விண்ணப்பிக்கலாம்.
கணிதத்தில் வலுவான அடித்தளம் பெற்ற சிங்கப்பூர்க் குடியுரிமை பெற்ற மாணவர்கள் இதற்குத் தகுதிபெறுவர்.
இந்தக் கல்வி உபகாரச் சம்பளத்தைப் பெறும் மாணவர்களுக்கு உயர்கல்வி நிலையங்களின் பயிலரங்குகள், நிறுவனங்கள் நடத்தும் கற்றல் பயணங்கள் போன்றவற்றில் பங்குபெறும் வாய்ப்பு கிட்டும்.
பொருளியல் வளர்ச்சிக் கழகமும் கல்வி அமைச்சும் இணைந்து பங்குபெறும் நிறுவனங்களில் பயில்நிலை வேலைப்பயிற்சிக்கும் ஏற்பாடு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டது. கூடுதலான நிறுவனங்கள் இதில் கலந்துகொள்ளவேண்டும் என்று அமைச்சர் சான் கேட்டுக்கொண்டார்.
நிலப் பற்றாக்குறையைச் சமாளித்தல், நீடித்த நிலைத்தன்மை மிக்க எரிசக்தி, உலகளாவிய உற்பத்தி, வர்த்தக, முதலீட்டுச் சங்கிலியில் சிங்கப்பூரின் இடம் ஆகியவை நாட்டின் அடுத்த கட்ட வளர்ச்சி இலக்குகள் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சவால்களைச் சமாளிக்க இளம் சிங்கப்பூரர்கள் நாட்டின் வருங்காலத்தில் பங்கெடுக்கும் ஆர்வத்துடன் பொறியியல், தொழில்நுட்பத் துறைகளில் திறன்பெற்றிருப்பதும் அவசியம் என்று திரு சான் குறிப்பிட்டார்.