கி.ஜனார்த்தனன்
அறிவியல் போட்டி ஒன்றுக்காக 'வீகன்' எனும் நனிசைவ பனிக்கூழ் தயாரிப்பதில் புத்தாக்கம் காட்டி பாராட்டு பெற்றார் ஷர்மிலா நந்தகுமாரன், 20 (படம்). ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் உயிரியல் தொழில்நுட்பத் துறையில் இவர் பட்டயம் பெற்றார்.
சிறு வயதிலிருந்து ரொட்டி சுடுவதிலும் கேக் செய்வதிலும் ஆர்வம் காட்டிய ஷர்மிலா, உணவை அறிவியல் கண்ணோட்டத்தில் இருந்து கண்டுவந்ததாகக் கூறினார். பொங்கோல் தொடக்கப்பள்ளியில் பயின்ற இவருக்கு அறிவியல் பாடம் அத்துப்படி. செங்காங் உயர்நிலைப்பள்ளியில் உயிரியல், வேதியியல், இயற்பியல் பாடங்களைப் பயின்று தேர்ச்சி அடைந்தார்.
உணவுத் தயாரிப்பு குறித்த விவரங்களைப் பற்றி உயிரியல் தொழில்நுட்ப வகுப்பில் படிக்கலாம் என்பதை தெரிந்துகொண்ட ஷர்மிலா, அதில் சேர முடிவு செய்தார்.
பலதுறைத் தொழிற்கல்லூரியில் தாவரங்களை அடிப்படையாகக் கொண்ட உணவு வகைகளைத் தயாரிப்பதற்கான போட்டி ஒன்று இவருக்கு நன்மதிப்பைத் தேடித் தந்தது. 134 பேர் கலந்துகொண்ட அந்தப் போட்டியில் தலைசிறந்த 16 குழுக்களில் ஒன்றாக இவரது குழு இடம்பெற்றது.
கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை அந்தப் போட்டியில் ஈடுபட்ட ஷர்மிலாவும் இவரது குழுவினரும் கொண்டைக்கடலையும் 'ஓட்ஸ்' தானியத்தால் தயாரிக்கப்பட்ட பாலையும் பயன்படுத்தி பனிக்கூழ் செய்தனர். பனிக்கூழில் வழக்கமாக சேர்க்கப்படும் முட்டைக்குப் பதிலாக கொண்டைக்கடலையையும் பாலுக்குப் பதிலாக ஓட்ஸ் பாலையும் இவர்கள் பயன்படுத்தினர்.
வழக்கமான பனிக்கூழைவிட கொழுப்பு குறைவாக உள்ள இந்தப் பனிக்கூழை உருவாக்குவது அவ்வளவு எளிதல்ல. முப்பது முறைக்குமேல் முயற்சி செய்த பிறகே அவர்கள் எதிர்பார்த்தபடி பனிக்கூழ் சரியாக உருவானது. இதற்குத் தேவையான ரசாயன மூலப்பொருள்களின் அளவைத் தொடர்ந்து மாற்ற வேண்டி இருந்ததாக ஷர்மிலா குறிப்பிட்டார்.
அறிவுக்கூர்மையையும் விடாமுயற்சியையும் சோதித்த இந்தப் போட்டி, பலதுறைத் தொழிற்கல்லூரி வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு தருணம் என்றார் இவர்.
இந்த வெற்றிக்காக ஷர்மிலாவுக்கு உள்ளகப் பயிற்சியை வழங்கிய 'நெஸ்ட்லே' நிறுவனம், பின்னர் இவருக்கு முழுநேர வேலையையும் தந்தது. அந்நிறுவனத்தின் விதிமுறை, தரநிலைக் கண்காணிப்பு நிர்வாகிக்கு உதவியாளராக ஷர்மிலா பணியாற்றுகிறார்.
பலதுறைத் தொழிற்கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு சுயமாகச் செயல்படும் மனப்போக்கு முக்கியம் என்கிறார் ஷர்மிலா.
"இங்கு சுய உழைப்பே அவரவர் முன்னேற்றத்தைத் தீர்மானிக்கும். உழைக்க விரும்புவோருக்கு வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன," என்றார் இவர்.
இல்லத்தரசியான தாயாரும் காவல்துறை அதிகாரியான தந்தையும் தந்த ஊக்கத்தால் அறிவியல் துறையில் சேர்ந்த ஷர்மிலா, இத்துறையில் மேலும் பல பெண்கள் சேர வேண்டும் என விரும்புகிறார்.