பிடோக் நார்த்தில் உள்ள அடுக்குமாடி வீட்டில் கடந்த வாரம் மரணமடைந்த குழந்தையின் தாயார் இன்னமும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்.
ஆனால் அவர் உடல்நிலை சீராக உள்ளது.
தொடர்பு, தகவல், தேசிய வளர்ச்சி அமைச்சுகளுக்கான துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் அந்தப் பெண்ணின் உடல்நிலை பற்றி திங்கள் (மே 16) அன்று ஃபேஸ்புக்கில் மேல்விவரம் அளித்தார்.
திரு டான் ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில் பிடோக் நார்த் அவென்யூ 2 புளோக் 409ல் உள்ள நான்காவது மாடியில் உள்ள வீட்டில் தீப்பிடித்துக் கொண்டது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை காலை 6.40 மணிக்கு அங்கு சென்றபோது, வீட்டில் நான்கு பேர் மூர்ச்சையாகி இருந்தனர்.
அந்த 34 வயது மாது, அவரது மூன்று வயது குழந்தை, 35 வயது ஆடவர் ஒருவர் என மூன்று பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
ஆடவரும் குழந்தையும் காயம் காரணமாக பின்னர் மருத்துவமனையில் உயிர் இழந்தனர்.
அந்த வீட்டில் தங்கியிருந்த மற்றொருவரான 56 வயது திருவாட்டி அய்லீன் சான் சம்பவ இடத்திலேயே மாண்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
திருவாட்டி சான் திரைப்பட தயாரிப்பாளராகவும் நடிகையாகவும் பணிபுரிந்தவர்.
மருத்துவமனையில் உள்ள மாதின் உடன்பிறந்தவர்களுடன் தாம் தொடர்பில் இருப்பதாகவும் அவர்கள் அந்தப் பெண்ணின் உடல்நிலையை கண்காணித்து வருவதாகவும் திரு டான் கூறினார்.
"சமூகம் முடிந்தவரை ஆதரவு தர முன்வரும் என்று அவர்களுக்கு உறுதி அளித்தேன் என்றும் திரு டான் குறிப்பிட்டார்.