போர் வெடித்தால் அதை எதிர்கொள்ள எவ்வாறு தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை ஆசிய நாடுகள் யோசிக்க வேண்டும் என்று ஜப்பான் தலை
நகர் தோக்கியோவில் பிரதமர் லீ சியன் லூங் நேற்று தெரிவித்தார்.
ஆனால் அத்தகைய சூழ்நிலை உருவாவதற்கு முன்னரே எவ்வாறு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதை ஆசிய நாடுகள் ஆராய வேண்டும் என்றார் அவர். அப்போதுதான் ஆசியாவில் அமைதி நிலவும் என்றும் பூசல்கள் ஏற்படும் அபாயம் குறைவாகவும் இருக்கும் என்றும் திரு லீ கூறினார்.
"நாடுகளிடையே உறவுகள் கசந்து போர் வெடிப்பது சாத்தியமே என்பதை ஐரோப்பாவில் தற்போது நிகழ்பவை காட்டுகின்றன. ஆசியாவிலும் இத்தகைய நிலை ஏற்படும் அபாயம் இருப்பதை நாம் மறுக்க முடியாது.
"நாடுகள் ஒன்றிணைந்து செயல்படவும் ஒன்றாகச் செழித்தோங்கவும் தேவையான வாய்ப்புகளை நம்மால் எவ்வளவு முடியுமோ உருவாக்க வேண்டும். ஏற்கெனவே இருக்கும் பதற்றநிலை பூதாகரமாக வெடிக்கும் அபாயத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும்," என்று திரு லீ தெரிவித்தார்.
இதற்கு தற்காப்பு உத்திகளையும் அதுதொடர்பான செலவுகளையும் மீண்டும் ஆராய வேண்டும். அத்துடன், அனைத்துத் தரப்பினருக்குப் பலன் அளிக்கும் பொருளியல் ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும் என்றார் திரு லீ. ஜப்பானிய ஊடகக் குழுமமான நிக்கேய் ஏற்பாடு செய்த 'ஆசியாவின் எதிர்காலம்' அனைத்துலக மாநாட்டில் திரு லீ பேசியபோது இக்
கருத்துகளைத் தெரிவித்தார்.
வட்டார விவகாரங்களில் ஜப்பானுக்கு அதிக பங்கு இருப்பதை பிரதமர் லீ சுட்டினார். ஆசியாவில் அந்நாடு முன்னணி முதலீட்டாளராக இருப்பதாகவும் வர்த்தக
தாராளமயமாதலுக்குக் குரல் கொடுத்ததாகவும் அவர் கூறினார். இருப்பினும், பாதுகாப்பு தொடர்பாக ஜப்பான் கூடுதல் பங்களிக்கலாம் என்றார் திரு லீ. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜப்பான் தற்போது ஆரவாரம் இல்லாமல் செயல்பட்டு வருகிறது என்றார் அவர்.
"இரண்டாம் உலகப் போர் நடந்து முடிந்து பல ஆண்டுகள், பல தலைமுறைகள் கடந்துவிட்டன. தற்போது புதிய சூழல் நிலவுகிறது. இதனால் கடந்தகால நிகழ்வுகளை ஜப்பான் ஏற்றுக்கொண்டு அவற்றை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். அவ்வாறு செய்தால் வட்டாரப் பாதுகாப்புக்கு ஜப்பானால் கூடு
தலாகப் பங்களிக்க முடியும்," என்று பிரதமர் லீ கூறினார்.
அணுவாயுதங்களை வைத்
திருப்பது போன்ற விவகாரங்கள் ஜப்பானிலும் தென்கொரியாவிலும் பகிரங்கமாகப் பேசப்படுவதை திரு லீ சுட்டினார். "தன்னைத் தற்காத்துக்கொள்ள தற்காப்பு ஆற்றலுக்கு வலுசேர்ப்பது குறித்து ஒவ்வொரு நாடும் பரீசிலனை செய்வது இயல்பு. ஆனால் வட்டாரப் பாதுகாப்பு கோணத்திலிருந்து பார்த்தால் நாடுகளுக்கிடையே ஆயுதப் போட்டி ஏற்படும் அபாயம் ஏற்படக்கூடும். இதனால் ஆசியாவில் நிலை
யற்றத்தன்மை ஏற்படக்கூடும்," என்று திரு லீ எச்சரிக்கை ஒலி எழுப்பினார்.