ஜிசிஇ சாதாரணநிலை தேர்வின் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பு நடத்தப்படும் மாணவர் சேர்ப்புத் திட்டத்தை பலதுறைத் தொழிற்கல்லூரிகள் தொடங்கியுள்ளன. இத்திட்டத்தின்கீழ் சாதாரணநிலைத் தேர்வு முடிவுகள் தெரிவதற்கு முன்னதாகவே பலதுறைத் தொழிற்கல்லூரியில் தாங்கள் பயில விரும்பும் துறைகளில் நிபந்தனைகளுடன் இடத்தை மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
மாணவர்களின் ஆற்றல், அவர்கள் வகித்துள்ள பதவிகள், அவர்களது சாதனைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு இடம் வழங்கப்படும்.
சிங்கப்பூரில் ஐந்து பலதுறைத் தொழிற்கல்லூரிகள் உள்ளன. அடுத்த ஆண்டுக்கான மாணவர் சேர்ப்பு வரும் திங்கட்கிழமையிலிருந்து தொடங்குகிறது. மாணவர்கள் நேரில் சென்று பலதுறைத் தொழிற்கல்லூரிகள் நடத்தும் வளாகச் சுற்றுலாக்களிலும் பயிலரங்குகளிலும் கலந்துகொள்ளலாம்.
கொவிட்-19 தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளபோதிலும் மாணவர் சேர்ப்புத் திட்டத்தின் சில அம்சங்கள் தொடர்ந்து இணையம்வழி நடத்தப்படுகின்றன.
"கொவிட்-19 கட்டுப்பாடுகள் தொடர்ந்து தளர்த்தப்பட்டு வருகின்றன. இதன்மூலம் நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் மாணவர் சேர்ப்புத் திட்டம் தொடர்பாக நடத்தப்படும் நடவடிக்கைகளில் நேரில் வந்து ஈடுபட கூடுதல் மாணவர்களுக்கு அனுமதி வழங்க விரும்புகிறோம். நேரில் வர முடியாமல் போனாலும் தேர்வு முடிவுகள் வெளிவருவதற்கு முன்பான மாணவர் சேர்ப்புத் திட்டம் பற்றி அவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி ஊழியர்களிடம் அவர்கள் கேட்டுத் தெரிந்துகொள்ள மற்ற ஏற்பாடுகளும் செய்யப்படும்," என்று நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியின் முதல்வரும் தலைமை நிர்வாகியுமான திருவாட்டி ஜீன் லியூ கூறினார்.
தேர்வு முடிவுகள் வெளிவருதற்கு முன்பான மாணவர் சேர்ப்புத் திட்ட நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. நிகழ்ச்சியின்போது கருத்தரங்குகள், உரைகள், வளாகச் சுற்றுலாக்கள் ஆகியவை நேரடியாகவும் இணையம் வாயிலாகவும் நடத்தப்பட்டன. இந்தத் திட்டத்தின் வழி பலதுறைத் தொழிற்கல்லூரிகளில் வழங்கப்படும் பாடத்திட்டங்கள் பற்றி மாணவர்களும் பெற்றோரும் தெரிந்துகொண்டு ஆலோசனை பெறலாம். தேர்வு முடிவுகள் வெளிவருவதற்கு முன்பான மாணவர் சேர்ப்புத் திட்டத்தை நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி இன்று தொடங்குகிறது.
இத்திட்டத்திற்காக நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி ஒதுக்கிய 400 இடங்களும் ஒரு வாரத்துக்கும் முன்பே நிரப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனவே, மேலும் 1,000 பேர் கலந்துகொள்ளக்கூடிய இன்னோர் இடத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்மாதம் பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் இணையம் மூலம் கருத்தரங்குகள், நேரில் நடத்தப்படும் வளாகச் சுற்றுலாக்கள் போன்ற தெரிவுகளை சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியும் தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியும் நடத்துகின்றன.
ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி நேரில் நடத்தப்படும் வளாகச் சுற்றுலாக்களை அடுத்த மாதம் மீண்டும் தொடர இருக்கிறது. இணையம் வழி நடவடிக்கைகளையும் அது நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.