மாதங்கி இளங்கோவன்
சிங்கப்பூரில் தமிழ்மொழி எதிர்காலத்தில் கூடுதல் வேகத்தில் முன்னேறும் என்பதற்கான அறிகுறிகளை தமிழ்மொழி விழா நிகழ்ச்சிகளின் தன்மை பிரதிபலிக்கிறது என்றார் வளர்தமிழ் இயக்கத்தின் ஆலோசகர் குழுவின் தலைவரும் செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான விக்ரம் நாயர்.
தமிழ்மொழி விழாவை வெற்றிகரமாக நடத்திய இணை ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் நேற்று முன்தினம் வளர்தமிழ் இயக்கம் விருந்து உபசரிப்பு விழாவை ஒன் ஃபேரர் ஹோட்டலில் நடத்தியது. ஏறத்தாழ 100 பேர் அந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இவ்வாண்டு வளர்தமிழ் இயக்கத்தோடு சேர்ந்து இணை ஏற்பாட்டாளர்கள் நடத்திய 44 சிறப்பு நிகழ்ச்சிகள் பல்வேறு வயதினரை ஈர்க்கும் விதத்தில் உருவாக்கப்பட்டதால் அவை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதாகவும் பகிர்ந்துகொண்டார், கல்வி அமைச்சின் தமிழ்மொழி கற்றல், வளர்ச்சிக் குழுவின் தலைவருமான விக்ரம் நாயர்.
"சிங்கப்பூர் தமிழர்களிடத்தில், குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளையர்களிடத்தில் தமிழ்மொழியை வாழும் மொழியாக னவத்திருப்பதே முக்கியம். மொழிதான் நமது அடையாளம். அதனைத் தொடர்ந்து கட்டிக்காக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கின்றது," என்றும் அவர் வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில் இசையும் நாட்டியமும் கலந்த விருந்தையும் அளித்தனர் மகுலம் கலைக்கூடத்தைச் சேர்ந்த நடனமணிகள். அவர்கள் திருக்குறள் சம்பந்தப்பட்ட பாடலுக்கு பரதநாட்டிய படைப்பு ஒன்றைச் செய்ததோடு தமிழ்ப் பாடல் ஒன்றுக்கு ஒயிலாட்டப் படைப்பையும் வழங்கினர். தமிழ் மொழி விழாவில் கலந்துகொண்ட அமைப்புகளுக்கும் ஏற்பாட்டாளர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இம்மாதிரியான விருந்துபசரிப்பு விழாக்கள் வளர்தமிழ் இயக்கத்தின் நிகழ்ச்சிகளுடைய இணை ஏற்பாட்டாளர்கள் ஒருவரை ஒருவர் நேரடியாகச் சந்தித்துப் பேசுவதற்கு ஒரு வாய்ப்பை உருவாக்குகிறது என்று பகிர்ந்துகொண்டார் வளர்
தமிழ் இயக்கத்தின் தலைவர் திரு சு. மனோகரன்.
"வளர்தமிழ் இயக்கம் தொடர்ந்து இளையர்கள் தமிழ்மொழியில் உரையாடுவதற்கு ஊக்குவிக்க அவர்களுடைய விருப்பங்களுக்கு ஏற்ப பல நிகழ்ச்சிகளை விரைவில் ஏற்பாடு செய்யும். எழுத்து தமிழை மட்டுமல்லாமல் பேச்சுத் தமிழையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தினால் சிறப்பாக இருக்கும்," என்றார்.
வளர்தமிழ் இயக்கத்தின் துணை செயலாளராகச் சேவையாற்றி விடைபெறும் விஜி ஜெகதீஷ் இந்த நிகழ்ச்சியில் உரையாற்றினார். அவர் 2007ஆம் ஆண்டு முதலில் ஈடுபட்டு ஏற்பாடு செய்த தமிழ் மொழி விழா முதல்கொண்டு இன்று வரை தம் பயணத்தில் கண்டுள்ள மாற்றங்களை விவரித்தார்.
இன்றைய மாணவர்கள் தமிழில் பேசுவதற்கு கூச்சப்படாமலிருக்க வளர்தமிழ் இயக்கம் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கும் உயர்
நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் அவர்களுடைய பள்ளிகளிலேயே தங்கள் பேச்சுத் திறனையும் எழுத்துத் திறனையும் வளர்ப்பதற்கு சில நடவடிக்கைகளை ஏற்பாடு செய்ய விரும்புகிறது.