தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் கலை ரசனையை வளர்க்க, உலவும் கலை லாரி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அடுத்த மூன்று ஆண்டுகளில் இங்குள்ள எல்லா தொடக்கப்பள்ளிகளுக்கும் உயர்நிலைப் பள்ளிகளுக்கும் அந்தக் கலை லாரி செல்லும்.
முதற்கட்டமாக அந்த லாரி ஏழு பள்ளிகளுக்குச் செல்லும்.
தேசிய கலைக் கூடம் அந்தத் திட்டத்தை நடத்துகிறது. அதற்கான $200,000 செலவை, அப்ளைட் மெட்டீரியல்ஸ் எனும் மின்கடத்தி நிறுவனம் வழங்கியுள்ளது.
அப்பர் சாங்கி சாலையில் உள்ள அப்ளைட் மெட்டீரியல்ஸ் நிறுவனத்தின் கட்டடத்தில் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.
தேசிய கலைக்கூடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள 10 கலைப்பொருள்களின் அச்சுப்படம் அந்த லாரியில் இடம்பெற்றுள்ளது. அந்தக் கலைப்பொருள்கள் பற்றி சிந்திக்கத் தூண்டும் கேள்விகளும் அங்கு வைக்கப்பட்டிருக்கும்.
உலவும் கலை லாரி ஒவ்வொரு பள்ளியிலும் மூன்று முதல் ஐந்து நாள்களுக்கு இருக்கும். கலைக் கல்வியாளர் ஒருவர் மாணவர்களுக்கு வழிகாட்டுவார்.
புகழ்பெற்ற சிங்கப்பூர், தென்கிழக்காசிய ஓவியர்களின் படைப்புகள் லாரியில் வைக்கப்படும்.
'வாண்டரிங்' எனும் கருப்பொருள்கொண்டு 1970கள் முதல் 1980கள் வரை ஜாஃபர் லத்திஃப் உருவாக்கிய பாத்திக் ஓவியங்கள், ஜார்ஜெட் சென்னின் 'வாட்டர்ஃபிரண்ட்' ஓவியம் உள்ளிட்டவை அவற்றில் அடங்கும். லாரியில் உள்ள ஓவியங்கள் மூன்று மாதங் களுக்கு ஒரு முறை மாற்றப்படும்.
கலையை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் தங்கள் முயற்சிகளில் இத்திட்டமும் ஒன்று என தேசிய கலைக் கூடத்தின் மூத்த இயக்குநர் சூவேன் மேகன் டான் கூறினார். மாணவர்களுக்கு இது வசதி யாக இருக்கும் என்றார் அவர்.