சுவா சூ காங்கில் குழந்தைகள் விளையாட்டுத் திடல், காற்பந்துச் சிற்றரங்கு மற்றும் இதர பொழுதுபோக்கு வசதிகளுடன் கூடிய புதிய விளையாட்டு நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
சுவா சூ காங் அவென்யூ 4, புளோக் 421க்கு அருகில் அமைந்திருக்கும் 'த அரினா@கியட் ஹோங்' எனப்படும் இந்த நிலையம் திறக்கப்படுவதன் தொடர்பில் நடத்தப்பட்ட விளையாட்டு தின நிகழ்வு ஒன்றில் 10,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
மொத்தம் 639 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள புதிய விளையாட்டு நிலையத்தில் பூப்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து போன்றவற்றுக்கான அரங்கங்களுடன் 400 மீட்டர் மெதுவோட்டம் மற்றும் நடைப்பயிற்சிக்கான பாதையும் அமைக்கப்பட்டு உள்ளது. அந்தப் பாதையின் அருகில் சிறிய பூங்கா ஒன்றும் உள்ளது.
மேலும், பசுமைக் கூரையுடன் கூடிய கூட்ட அரங்கு, பெரியோருக்கும் மூத்தோருக்குமான கட்டுடல் பயிற்சியகம் ஆகியனவும் இதில் இடம்பெற்று உள்ளன.
கிட்டத்தட்ட நான்கு நான்கறை வீட்டுக்குச் சமமான இடத்தில், அதாவது 426 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள சிறுவர் விளையாட்டுத் திடல் இரு பிரிவுகளைக் கொண்டு உள்ளது.
ஒன்றில் இரண்டு வயது முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகள் விளையாடலாம்.
மற்றொன்று, ஏழு வயது முதல் 12 வயது வரையிலான சிறுவர்கள் விளையாடக்கூடியது.
புதிய விளையாட்டு நிலையம் இதற்கு முன்னர் லாம் சூன் சமூக நிலையம் அமைந்திருந்த இடத்தில் கட்டி எழுப்பப்பட்டு உள்ளதாக சுவா சூ காங் குழுத்தொகுதிக்கு உட்பட்ட கியட் ஹோங் தொகுதியைப் பிரதிநிதிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஸுல்கர்னைன் அப்துல் ரஹிம் கூறினார்.
திறப்பு விழாவில் பங்கேற்ற அவர், "இந்த இடத்தில்தான் நாங்கள் எல்லாவித நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தோம்.
"குடியிருப்பாளர்களின் விருப்பத்திற்கு இணங்கவும் நகர மன்றத்தின் ஆதரவினாலும் இப்போது அதே இடத்தில் அனைத்தையும் உள்ளடக்கிய புதிய வசதிகளைப் பெற்றிருக்கிறோம்," என்றார்.
தடுப்புகள் இல்லாத நுழை
வாயிலைக் கொண்டதாக அமைந்துள்ள விளையாட்டு அரங்கத்தில் மூத்தோரும் உடற்குறை உள்ளோரும் எளிதில் வந்துசெல்வதற்கு வசதியாக சரிவுப் பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
தந்தையர் தினத்தில் கடைப்பிடிக்கப்பட்ட விளையாட்டு தினம் ஈராண்டுகளுக்குப் பின்னர் நேற்று கொண்டாடப்பட்டது.
கொவிட்-19 கொள்ளைநோய் காரணமாக பெருந்திரளானவர்கள் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டிருந்ததால் இந்தக் கொண்டாட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
சமூகப் பிணைப்பை குடியிருப்பாளர்களிடையை ஊக்குவிக்கவும் அதிகமானோர் உடற்பயிற்சியில் ஈடுபடவும் விளையாட்டு தினம் இங்கு ஏற்பாடு செய்யப்படுவதாக திரு ஸுல்கர்னைன் தெரிவித்தார்.
$15 மில்லியன் செலவிலான கியட் ஹோங் பேட்டை புதுப்பிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக விளையாட்டு நிலையம் உருவாக்கப்பட்டு உள்ளது.
சுவா சூ காங் அவென்யூ 3 மற்றும் அவென்யூ 4ல் உள்ள 401 முதல் 428 வரையிலான புளோக்குகளுக்கான புதுப்பிப்புத் திட்டம் இது.
கியட் ஹோங் பேட்டைக்குட்பட்ட பகுதிகளில் மேம்பட்ட தொடர்பு வசதிகளுடன் தற்போதுள்ள வசதிகளை மேம்படுத்து
வதும் இந்தத் திட்டத்தில் இன்னும் நிறைவேற்றப்பட உள்ளவை.
பேட்டை புதுப்பிப்புத் திட்டம் என்பது வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் திட்டம்.
வீவக பேட்டைகளை மேம்
படுத்தும் இந்தத் திட்டத்திற்கான நிதியை அரசாங்கம் முழுமையாக வழங்குகிறது. உத்தேச மேம்
பாடுகள் குடியிருப்பாளர்களின் பரிந்துரைகளின்பேரில் நிறைவேற்றப்படுகின்றன.
புதிய விளையாட்டு நிலையத் திறப்பு விழாவில் வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங், தென்மேற்கு வட்டார மேயரும் சுவா சூ காங் குழுத்தொகுதி நாடாளு மன்ற உறுப்பினருமான லோ யென் லிங், மற்றோர் உறுப்பினர் டான் வீ ஆகியோரும் கலந்துகொண்டனர்.