திரு அரவிந்த் ஆனந்தமோகன், 29, திருவாட்டி ஆப்பிள் நியோ ஆகிய இருவுரும் சிறந்த விலங்கு மருத்துவத் தாதியர், தொழில்நுட்பருக்கான விருதுகள் பெற்றுக்கொண்டனர். இந்த விருது கடந்த மாதம் முதல்முறையாக வழங்கப்பட்டது. சிங்கப்பூர் விலங்கு மருத்துவச் சங்கத்தின்கீழ் இயங்கும் விலங்கு மருத்துவத் தாதியர், தொழில்நுட்பர்கள் அமைப்பும்
செல்லப் பிராணிகள் தீனி விற்கும் ராயல் கெனைன் சிங்கப்பூர் நிறுவனமும் இந்த விருதுகளை வழங்கின.
சிங்கப்பூரில் விலங்கு மருத்துவத் தாதியர் விலங்கு மருத்துவத் தொழில்நுட்பப் பொறுப்புகளையும் ஏற்றுச் செயல்படுகின்றனர். விலங்குகளின் ஆரோக்கிய நிலையைக் கண்டறிய பரிசோதனைகளைச் செய்வது, ரத்தப் பரிசோதனைகளை நடத்துவது, எக்ஸ்ரே பரிசோதனைகளைச் செய்வது போன்ற பணிகள் மட்டுமின்றி விலங்கு மருந்தகங்களுக்கு வரும் விலங்குகள் சுத்தமாகவும் பதற்றமில்லாமல் இருப்பதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும்.
ஆனால் கடந்த பல ஆண்டு களில் இப்பணியிலிருந்து பலர் விலங்கிவிட்டனர். நீண்டநேரப் பணி, குறுகிய வாழ்க்கைத் தொழில் முன்னேற்றப் பாதை, களைப்பு, மனரீதியான பாதிப்பு போன்றவை இதற்குக் காரணங்கள். அதுமட்டுமல்லாது, செல்லப் பிராணிகளின் உரிமையாளர்களிடமிருந்து திட்டு வாங்கும் நிலையும் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் உள்ளது. அத்துடன் விலங்கு மருத்துவத் தாதியராவதற்கான கல்விப் பாதையும் ஆளுக்கு ஆள் மாறியிருப்பதும் ஒரு சவால் என்று தெரிவிக்கப்படுகிறது. திரு அரவிந்த், திருவாட்டி நியோ போன்ற பல உள்ளூர் விலங்கு மருத்துவத் தாதியர் இந்த வேலையில் சேர்ந்த பிறகு பணிபுரிந்துகொண்டே பயிற்சி பெற்றனர். அதையடுத்து, சில ஆண்டுகள் கழித்து இத்துறையைச் சார்ந்த சான்றிதழ்களைப் பெற்றனர்.
வேறு சிலர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் விலங்கு மருத்துவ அறிவியலில் பட்டயச் சான்றிதழ் பெற்று வேலையில் சேருகின்றனர். விருது வென்ற திரு அரவிந்த் ஃபேரர் சாலையில் உள்ள பெட்ஸ் அவென்யூ விலங்கு மருந்தகத்தில் செய்முறை நிர்வாகியாகவும் விலங்கு மருத்துவத் தாதியாகவும் பணிபுரிகிறார். அந்த மருந்தகத்தில் ஏழாண்டுகளுக்கு முன் சேர்ந்தார். விலங்கு மருத்துவராவதே அவரது இலட்சியம்.
சிங்கப்பூரில் விலங்கு மருத்துவத் துறையில் தரநிலையை உயர்த்த தேசிய அளவிலான ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், விலங்கு மருத்துவத் தாதியர், தொழில்நுட்பர்கள் ஆகியோரிடமிருந்து எதிர்பார்க்கப்படும் பணித் திறன்களைப் பட்டியலிட்டு நெறிப்
படுத்தும் பொறுப்புகளுக்கு விலங்கு மருத்துவத் தாதியர், தொழில்நுட்பர்கள் அமைப்பு தலைமைதாங்கும் என்று அதன் இணைத் தலைவர் டாக்டர் டினோ பூன் ஹான் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் தற்போது 800லிருந்து 1,200 வரையிலான விலங்கு மருத்துவத் தாதியர் உள்ளனர்.