அதிகரித்துவரும் இணைய மிரட்டல்களுக்கு எதிராக இணையப் பாதுகாப்பு நிபுணர்கள் தொடர்ந்து தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி தெரிவித்துள்ளார்.
புதிய தொழில்நுட்பங்கள், வர்த்தக முறைகளுக்குள் ஊடுருவும் ஆற்றல் உடையோருக்கு எதிராக இணையப் பாதுகாப்பு நிபுணர்கள் ஈடுகொடுத்து செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
"புதிய மின்னிலக்கத் தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு வரும் வேளையில், இணைய மிரட்டல்கள் உருமாறி வருகின்றன," என்று கூறிய அவர், தொழில்நுட்பக் கட்டமைப்புக்குள் ஊடுருவி தரவுகளைத் திருட ஊடுருவிகள் புதுப்புது வழிகளைத் தேடிக்கொண்டு இருப்பதாகச் சொன்னார்.
சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு ஆணையம் ஏற்பாடு செய்த போட்டி ஒன்றின் விருது நிகழ்ச்சியில் நேற்று கலந்துகொண்டு பேசியபோது டாக்டர் ஜனில் இதைத் தெரிவித்தார்.
புதிய சாதனங்கள், வர்த்தக முறை, தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் வேளையில், இணையப் பாதுகாப்பு சவால்களும் தொடர்ந்து ஏற்படும் என்றார் அவர். எனவே, தனியார், அரசாங்க அமைப்புகளுக்கு இடையே பங்காளித்துவ முயற்சியில் ஈடுபட வேண்டியதன் முக்கியத்துவத்தை டாக்டர் ஜனில் வலியுறுத்தினார்.