யுகேஷ் கண்ணன்
செங்காங் வட்டாரத்தின் வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடி கட்டடங்களின்கீழ் அமைந்துள்ள பூப்பந்து மைதானங்களில் சிறு வயதில் தனது தந்தையுடன் டென்னிஸ் விளையாடி வந்த ஷாஹீத் அலாம், 24, தற்போது அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் அமைந்து உள்ள கெய்சர் பல்
கலைக்கழகத்துக்காக
டென்னிஸ் விளையாட இருக்கிறார்.
ஷாஹீத் சிறுவனாக இருந்த போது பல விளையாட்டுகளை விளையாடும் வாய்ப்பை அவரது தந்தை ஏற்படுத்திக் கொடுத்தார். ஆனால், டென்னிஸ் விளையாட்டில் இவர் சிறந்து விளங்கியதால் அவ்விளையாட்டுக்கான முறையான பயிற்சிகளுக்குத் தன்னை தன் தந்தை அனுப்பியதாக அவர் கூறினார்.
டென்னிஸ் விளையாட்டை முழு நேரமாக விளையாடுவது குறித்த எண்ணம் அவருக்கு 2013ஆம் ஆண்டுக்கு முன்பு ஏற்படவில்லை.
ஆனால், பத்து வயது, 12 வயதுக்குட்பட்ட போட்டிகளில் நன்கு விளையாடி வந்த ஷாஹீதுக்கு சிங்கப்பூர் டென்னிஸ் சங்கத்தின் முழுநேர டென்னிஸ் திட்டத்தில் இணையும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
அத்திட்டத்துக்கான சோதனை விளையாட்டுகளுக்கு 2011ஆம் ஆண்டு சென்றபோது காயம் காரணமாக ஷாஹீத்தால் தேர்ச்சி பெற முடியவில்லை. இரண்டாவது வாய்ப்பு தன்னைத் தேடி வந்தபோது அதை இவர் நழுவவிடவில்லை.
அத்திட்டத்தில் முன்பே இணைந்த விளையாட்டாளர்களின் திறமைக்கு இணையாக உயர வேண்டுமானால், பள்ளியிலிருந்து ஓர் ஆண்டுகாலம் இடைவேளை தேவை எனத் தானும் தனது குடும்பத்தாரும் ஒரு முடிவுக்கு வந்ததாக ஷாஹீத் தெரிவித்தார்.
அதனால், அப்போது செயிண்ட் ஆண்ட்ரூஸ் உயர்நிலைப்பள்ளியில் பயின்று வந்த ஷாஹீத் ஓர் ஆண்டிற்கு பள்ளியிலிருந்து விடுப்பு எடுத்துக்கொண்டார்.
அதன் பின்பு 2014ஆம் ஆண்டில், சிங்கப்பூர் விளையாட்டுப்
பள்ளியில் அவர் சேர்ந்தார்.
அங்குள்ள கல்வித்திட்டம் விளையாட்டாளர்களுக்கு ஏற்ப நீக்குப்போக்காக இருந்தது தனக்கு மிகவும் உதவியாக இருந்ததென அவர் கூறினார்.
சிங்கப்பூர் விளையாட்டுப்
பள்ளியில் இரண்டாம் ஆண்டு மாணவராக இருந்தபோது, அனைத்துலக டென்னிஸ் சங்கம் நடத்திய இளையர் ஆண்கள் ஒற்றையர் போட்டியில் தங்கப் பதக்கத்தை அவர் வென்றார். இப்போட்டியில் வென்ற முதல் சிங்கப்பூரர் எனும் பெருமை இவரைச் சேரும்.
அதே ஆண்டில் சிங்கப்பூரில் நடைபெற்ற தென்கிழக்காசிய விளையாட்டுகளில் 16 வயது இளையராக சிங்கப்பூரைப் பிரதிநிதித்து இவர் விளையாடினார்.
சிங்கப்பூர் விளையாட்டுப்
பள்ளியில் தொடர்ந்து 2020ஆம் ஆண்டு வரை விளையாட்டு மேலாண்மைப் பாடத்தில் தனது
பட்டயக் கல்வியைப் பயின்றார் ஷாஹீத். டேவிஸ் கிண்ணம், 2017, 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தென்கிழக்காசிய விளையாட்டுகள் எனப் பல போட்டிகளில் அவர் பங்கேற்றார்.
தேசிய சேவை காரணமாக இவ்வாண்டு நடைபெற்ற தென்கிழக்காசிய போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போனதென ஷாஹீத் குறிப்பிட்டார்.
ஆனால், தேசிய சேவையில் தனது மேலதிகாரிகள் தன்னையும் தனது தேவைகளையும் புரிந்து கொண்டதால் பயிற்சிகளுக்கும் போட்டிகளுக்கும் செல்ல அனுமதி வழங்கியதாக ஷாஹீத் கூறினார்.
தேசிய சேவையை முடித்தபின் பயிற்றுவிப்பாளர் ஆகலாமா அல்லது தொடர்ந்து டென்னிஸ் விளையாடலாமா என்ற கேள்வி தனக்குள் எழுந்தபோது, தன் குடும்பத்தாருடன் அதைப் பற்றி ஷாஹீத்
கலந்து ஆலோசித்தார்.
இத்தனை நாள் கடும் உழைப்பை 23 வயதிலேயே முடிவுக்குக் கொண்டு வருவது சரியாகாது என்று ஷாஹீதும் அவரது குடும்பத்தாரும் தீர்மானித்தனர்.
மறைந்த தனது தந்தையும் இவர் தொடர்ந்து விளையாட வேண்டும் என்றே விரும்பியிருப்பார் என ஷாஹீத் கூறினார்.
அமெரிக்காவில் உள்ள
பல்கலைக்கழகத்தில் விளையாடு
வதன் மூலம் நல்ல பயிற்சித்
திட்டங்களையும் போட்டித்தன்மை மிக்க சூழல்களில் விளையாடும் திறன்களையும் பெறலாம் என அவர் நம்புகிறார்.
எனவே, அவ்வாறு செயல்பட அவர் முடிவெடுத்துள்ளார்.
அத்துடன், இதன்வழி இளங்கலைப் பட்டம் பெறும் வாய்ப்பும் கிட்டும் என்பதை உணர்ந்து அதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்தார்.
அமெரிக்காவில் விளையாட்டு
களுக்கெனப் பெரும் கட்டமைப்பு, நிதி, உபகாரச் சம்பளங்கள்
போன்றவை ஒதுக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
அனைத்துலக டென்னிஸ்
மன்றத்தின் இளம் விளையாட்
டாளர்களின் தரவரிசையைக் கண்டு தனது 18, 19ஆம் வயதுகளில் அமெரிக்காவில் உள்ள பல பல்கலைக்கழகங்கள் தன்னை நாடியதாக ஷாஹீத் தெரிவித்தார்.
ஆனால், அக்காலகட்டத்தில் பட்டயப்படிப்பில் அவர் கவனம் செலுத்தி வந்ததாலும் வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாததாலும் அந்த
அழைப்புகளை அவர் ஏற்கவில்லை.
இதனால், தனது 23 வயதில் தானே முன்வந்து அமெரிக்காவில் உள்ள பல பல்கலைக்கழகங்களை மின்னஞ்சல்வழி தொடர்புகொண்டு வாய்ப்பு கேட்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது என ஷாஹீத் கூறினார்.
அவ்வாறு தொடர்புகொண்ட பல்கலைக்கழகங்களில், கெய்சர் பல்கலைக்கழகம் கல்வி கட்டணம், தங்கும் செலவு என அனைத்தையும் உள்ளடக்கிய உபகாரச் சம்பளத்தை வழங்கியதாக அவர் குறிப்பிட்டார். பிற்காலத்தில் சிங்கப்பூரில் சொந்த டென்னிஸ் பயிற்சிப் பள்ளி ஒன்றைத் தொடங்க விரும்பும் ஷாஹீத், அத்திட்டத்திற்கு உதவும் என்ற நம்பிக்கையில், வர்த்தக நிர்வாகப் பட்டக் கல்வியைப் பயில இருக்கிறார்.
"டென்னிஸ் விளையாட்டை உயர்மட்ட நிலையில் விளையாட அதிகப் பணம் செலவாகும். எனவே, இந்த உபகாரச்
சம்பளத்தைப் பெற்றிருக்காவிடில் பயிற்றுவிப்பாளராகி இருப்பேன்" என ஷாஹீத் குறிப்பிட்டார்.
வெளிநாட்டில் படிக்கச் செல்வது சற்று பயமாக இருந்தாலும் ஆவலுடன் அதை எதிர்பார்த்துக் காத்திருப்பதாக அவர் கூறினார். இந்த வாய்ப்பு கிடைத்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிப்பதாக ஷாஹீத் தெரிவித்தார்.
தனக்கு அனைத்து வகையிலும் ஆதரவு அளித்துவரும் அவரது குடும்பத்தினருக்கு இவர் தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.
தனது வாழ்க்கைப் பயணத்தில் அவர்களை முக்கிய தூண்களாக அவர் கருதுகிறார்.