சிங்கப்பூருக்கு வருகை மேற்கொண்ட கொசோவோ அதிபர் ஜோசா ஒஸ்மானி சட்ரியூ, இஸ்தானாவில் அதிபர் ஹலிமா யாக்கோப்பை நேற்று சந்தித்தார்.
சிங்கப்பூருக்கும் கொசோவோவுக்கும் இடையிலான நல்லுறவை இரு தலைவர்களும் மறுஉறுதிப்படுத்தியதாக வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கைதெரிவித்தது.
இரு நாடுகளும் ஒத்துழைக்கக்கூடிய புதிய அம்சங்கள் குறித்தும் இவ்விருவரும் ஆராய்ந்தனர்.
நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின், பிரதமர் அலுவலக அமைச்சர் மாலிக்கி ஒஸ்மானையும் கொசோவோ அதிபர் சந்தித்தார். இருநாட்டு உறவைப் பற்றி பேசிய அவர்கள், வட்டார, அனைத்துலக நிலவரம் குறித்து கருத்துகளைப் பரிமாறிக்கொண்டதாக வெளியுறவு அமைச்சு அறிக்கை விளக்கியது.
கொசோவோ அதிபர் ஒஸ்மானி சட்ரியூவின் அதிகாரத்துவப் பயணம் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. அதை முடித்துக்கொண்டு நேற்று சிங்கப்பூரில் இருந்து அவர் புறப்பட்டார்.
அதிபர் ஹலிமா வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவு ஒன்றில், "சிங்கப்பூருக்கு முதன்முறையாக பயணம் மேற்கொண்ட கொசோவோ அதிபர் டாக்டர் ஜோசா ஒஸ்மானியை நான் சந்தித்தேன்.
"2016 டிசம்பர் 1ஆம் தேதி அரசதந்திர உறவுகள் ஏற்பட்டதில் இருந்து இரு நாடுகளும் நல்லுறவுகளைக் கொண்டுள்ளன.
"அதிபர் ஒஸ்மானியை சிங்கப்பூருக்கு வரவேற்றதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எதிர்காலத்தில் அவரை மீண்டும் சந்திக்க ஆவலுடன் உள்ளேன்," என்று கூறினார்.