மோனலிசா
தமிழர்களின் அடையாளத்தை முன்னிறுத்த தமிழ்மொழிக் கற்றல் அவசியம் என்று தொடர்பு, தகவல், சுகாதார மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி வலியுறுத்திக் கூறினார்.
மொழியும் கலாசாரமும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை என்று குறிப்பிட்ட அவர், இன்றைய இளைஞர்கள் தமிழ்மொழியை முழுமையாகக் கற்று அதன் மரபுடைமை கூறுகளையும் கலாசாரப் பின்னணியையும் அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று என்று தெரிவித்தார்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக தமிழ்ப் பேரவையின் செயற்குழு ஏற்பாட்டில் ‘நாளைய தலைவர்களின் குரல்’ என்ற கருப்பொரு ளுடன் ‘சிங்கப்பூர் தமிழ் இளையர் மாநாடு 2022’ மெய்நிகர் வழி நடக்கிறது.
இன்று முடிவடையும் மாநாட்டில் 16 முதல் 27 வரை வயதுள்ள உயர்நிலைப்பள்ளி, புகுமுக வகுப்பு, பல்கலைக்கழக மாணவர்கள், முழுநேர தேசிய சேவையாளர்கள், இளம் ஊழியர்கள் கலந்துகொள்கிறார்கள்.
அவர்களிடையே நேற்று உரையாற்றிய டாக்டர் ஜனில், ஒவ்வோர் இளையரும் தமிழ்ச் சமூகத்திற்குத் தன் பங்கை எப்படி எப்படியெல்லாம் ஆற்றலாம் என்பது பற்றி ஆராய வேண்டும் என்றார்.
மொழி கற்றல் என்பது கல்வி சார் பாடமாக மட்டும் அல்லாமல் கலாசார அனுபவமாகவும் இருக்க வேண்டும் என்ற அவர், மொழி செழித்து வளர கற்றலும் அனுபவமும் பக்க பலம் என்றார்.
சிங்கப்பூரின் ஒருங்கிணைந்த சமூகத்தில் தமிழர்களின் அடையாளத்தை நிலைநிறுத்த தமிழ்மொழியின் பல்வேறு சாராம்சங்களை அலசி ஆராய்ந்து அவற்றைப் பயனுள்ள முறையில் இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கூறிய டாக்டர் ஜனில், இதைப் பொறுத்தவரை இந்த மாநாடு போன்ற முயற்சிகள் வரவேற்கத்தக்கவை என்றார்.
சிங்கப்பூர் தமிழ் இளையர் மாநாடு 2012 முதல் ஈராண்டுக்கு ஒரு முறை என இந்த ஆண்டு நான்காவது முறையாக நடக்கிறது.
மாநாட்டின் நிறைவு விழா வரும் 9ஆம் தேதி மாலை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக அரங்கில் நடக்கும்.
இதனிடையே, இந்த மாநாடு பற்றி கருத்து தெரிவித்த தேசிய பல்கலைக்கழக தமிழ்ப் பேரவையின் தலைவர் விஜயராஜ் முத்துக்குமரன், 23, சிங்கப்பூர் தமிழ் இளையரின் ஆர்வத்தையும் மொழி ஆற்றலையும் தூண்டுவதற்கான முயற்சியே இந்த மாநாடு என்றார்.
தமிழ் மொழி, கலாசாரம் சார்ந்த வரலாற்றுப் பதிவுகளையும் தரவுகளையும் ஆராய்ந்து அறிய உதவும் தளமாகவும் இந்த மாநாடு அமையும் என்றும் அவர் கூறினார்.