யுகேஷ் கண்ணன்
உயர்கல்வி நிலையங்களில் பயின்று வரும் 106 மாணவர்களுக்கு ஏறக்குறைய $165,000 மதிப்பிலான ஊக்கத் தொகைகள் சிவதாஸ்-இந்து அறக்கட்டளை வாரிய கல்வி நிதி செயற்குழுவால் ஜூலை 2ஆம் தேதி வழங்கப்பட்டன.
1937ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு குடி பெயர்ந்து, ஆரம்பத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்து, பின்பு பத்திரிகையாளராக சேவையாற்றி, இறுதியில் சிறந்த முதலீட்டாளராக வலம் வந்தார் திரு சிவதாஸ்.
அவர் இறப்பதற்கு முன்பு 2009ஆம் ஆண்டில் தனது சொத்து களிலும் பங்குகளிலும் பெரும் பகுதியை இந்து மாணவர்களுக்கு உதவ கோரி அறக்கட்டளை வாரியத்திடம் ஒப்படைத்தார்.
அவரது விருப்பத்தை நிறைவேற்றும் நோக்குடன் சிவதாஸ்-இந்து அறக்கட்டளை வாரிய கல்வி நிதி தொடங்கப்பட்டது.
இந்நிதி 2011ஆம் ஆண்டில் இருந்து 2021ஆம் ஆண்டுவரை ஏறத்தாழ 2,300 மாணவர்களுக்கு $4.6 மில்லியன் வரையிலான நிதிஉதவியை வழங்கியுள்ளது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு ஆகியவற்றின் மூத்த நாடாளுமன்ற செயலாளர் எரிக் சுவா, அனைத்து மாணவர்களுக்கும் ஊக்கத்தொகைகளை வழங்கினார்.
சிவதாஸ்-இந்து அறக்கட்டளை வாரிய கல்வி நிதிச் செயற்குழுவின் தலைவரான நா. புருஷோத் தமன், 72, தொழில்நுட்ப கல்விக்கழகம், பலதுறைத் தொழிற்கல்லூரி, தனியார், பொது பல்கலைக்கழகங்கள் ஆகிய கல்வி நிலையங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இச்செயற்குழு இந்த ஊக்கத்தொகை களின் வழி உதவ முனைகிறது என்று தெரிவித்தார்.
இந்த ஊக்கத்தொகைகள் இம்மாணவர்களுக்கு பள்ளி கட்டணத்தைச் செலுத்துவது, கணினி வாங்குவது, படிப்பிற்குத் தேவையான இதர பொருள்களை வாங்குவது போன்ற செலவுகளுக்கு உதவும் என அவர் கூறினார்.
“இதுபோன்ற ஊக்கத்தொகைகள் வழங்கப்படுவதால் மாணவர்கள் ஊக்கம் பெற்று கல்வியில் சிறந்து விளங்க முனைவார்கள்.
“இதனால், குடும்பங்களில் அடுத்து வரும் தலைமுறையினரையும் இவர்கள் நன்கு கல்வி கற்க ஊக்குவிப்பர்,” என்று நம்பிக்கை தெரிவித்தார் இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு ராஜசேகர், 60.
வாழ்நாள் கற்றல் மிகவும் அவசியம் என கருதுகிறார் இந்நிகழ்ச்சியில் ஊக்கத்தொகைப் பெற்ற ஒருவரான டேவிட் ஆரோக்கியசாமி, 50.
இவர் தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பகுதி நேரமாக பாதுகாவல், வேலையிடப் பாதுகாப்பு, ஆரோக்கியம் எனும் துறையில் பட்டயக் கல்வி பயின்று வருகிறார். சிஸ்கோ நிறுவனத்தில் பணிபுரியும் இவர், “எனது குடும்பத்தின் ஆதரவோடு இவ்வயதிலும் தொடர்ந்து கல்வி கற்று வருகிறேன். எனது கடின உழைப்புக்கு இந்த ஊக்கத்தொகையின் வழி அங்கீகாரம் கிடைத்துள்ளது. எனக்கு இந்த உதவி கிடைத்துள்ளதைப் போல், நானும் என்னால் முடிந்த உதவியை சமூகத்திற்குத் தொடர்ந்து செய்வேன்,” என்று குறிப்பிட்டார்.
நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் தமிழ் கல்வியுடன் கூடிய ஆரம்பக்கால கல்வி பட்டயப்படிப்பின் முதலாம் ஆண்டில் பயின்று வரும் சரண்யா ஆறுமுகம், 20, தன் குடும்பத்தில் தனது தந்தை ஒருவர் மட்டுமே வேலை செய்து வருவதால், அவரது பாரத்தைக் குறைக்க இந்த ஊக்கத்தொகை மிகவும் உதவியாக இருக்கும் என கூறினார்.
சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் வான்வெளி அமைப்புகள் இளங்கலை பட்டப் படிப்பின் முதலாம் ஆண்டு மாணவரான ம. செல்வகணபதி, 24,
இதுபோன்ற ஊக்கத்தொகைகள் நமது நிதிச் சுமைகளைக் குறைப்பதோடு கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற உத்வேகத்தையும் ஏற்படுத்துகின்றன என்று கருதுகிறார்.