காற்பந்தாட்டக் களத்தில் கனவுகளுடனும் களைப்பறியா கால்களுடனும் அடியெடுத்து வைக்கிறார்கள் இந்தப் பெண்கள். தங்களின் முழுநேரப் பணிகளுக்கு இடையே காற்பந்து உலகிலும் சாதிக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் ஓயாது ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
சிங்கப்பூர் பிரிமியர் லீக் பெண்கள் காற்பந்துப் போட்டியில் கலக்கிக்கொண்டிருக்கும் இந்த நான்கு காற்பந்து வீராங்கனைகள் தங்களின் உழைப்பும் உந்துசக்தியும் நிறைந்த காற்பந்துப் பயணத்தைப் பற்றி நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்கள்.
தந்தை காட்டிய வழியில் செல்ல ஆசை
காற்பந்து பயிற்றுவிப்பாளரான தனது தந்தையைப் பயிற்சி வகுப்பு களின்போது பார்த்துப் பார்த்துத் தனது காற்பந்தாட்ட ஆர்வத்தை வளர்த்துக்கொண்டதாக 25 வயது முனீரா முகமது கூறுகிறார். தற்போது இவர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பொறியியல் துறையில் பட்டப்படிப்பு படிக்கிறார்.
“நான் நான்கு வயதாக இருந்தபோதே சிறுவர்களுக்கான காற்பந்துப் பயிற்சிப் பயிலரங்கில் என் தந்தை என்னைச் சேர்த்தார்.
“ஒரு காற்பந்து வீராங்கனை ஆவதற்கு அவரின் உடலும் உள்ளமும் உறுதியுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியதுடன் எனக்குப் பல்வேறு பயிற்சிகளை அளித்தார்,” என்றார் முனீரா. லயன் சிட்டி சேய்லர்ஸ் அணிக்காக விளையாடும் முனீரா, பெண்களின் காற்பந்துப் போட்டி களுக்கு அண்மையில் ஆதரவு அதிகரித்து வருவது குறித்தும் பேசினார். சிங்கப்பூர் பிரிமியர் லீக் பெண்கள் காற்பந்துப் போட்டிக்குப் பிரதான ஆதரவாளராக டெலாய்ட் நிறுவனம் $300,000 வெள்ளியை வழங்கியுள்ளது.
“பெண்கள் காற்பந்துப் போட்டி களைக் காணப் பொதுமக்களுக்கு ஆர்வமோ ஆசையோ இருந்ததில்லை. பொதுவாக போட்டிகளின்போது அரங்கில் பெரும்பாலும் காலி இடங்களைப் பார்ப்பது ஏமாற்றத்தையே தந்தது.
“தற்போது டெலாய்ட் நிறுவனத்தின்ஆதரவுடன் அனைத்து போட்டிகளும் யூடியூப் நேரலையில் ஒளிபரப்பப்படுவதால் முன்பைவிட அதிகப் பார்வையாளர்கள் போட்டியைப் பார்க்கிறார்கள். இது எங்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது,” என்றார் முனீரா. இந்தக் காற்பந்துப் பருவத்தில் வெற்றியாளர்களுக்கு 25,000 வெள்ளியும் இரண்டாம், மூன்றாம் இடத்தில் வருவோருக்கு $10,000, $7,500 தொகையும் வழங்கப்படவுள்ளன.
வல்லவனுக்கு பிளாஸ்டிக் பாட்டில்கூட ஆயுதம்தான்
சிறுவயதில் தன் உறவினர் வீட்டு சிறார்களுடன் பிளாஸ்டிக் பாட்டிலை உதைத்துக் காற்பந்து விளையாடியதாக தற்போது தொடக்கப்பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றும் எம் மோனிஷா நாயர், 27, நினைவுகூர்ந்தார்.
“காற்பந்து விளையாட்டின் விதிமுறைகளைப் பற்றி அறிந்திராத அந்த வயதில்கூட எங்களின் கைகளை முதுகின் பின்னால் கட்டிக்கொண்டு விளையாடினோம். சிறுமியாகத் தொலைக்காட்சியில் நான் கேலிச்சித்திரங்களைவிட காற்பந்து விளையாட்டுகளைத்தான் அதிகம் பார்த்தேன்,” என்றார் மோனிஷா.
சிங்கப்பூர் பிரிமியர் லீக் பெண்கள் காற்பந்துப் போட்டிக்காக தியோங் பாரு அணியில் விளையாடும் இவர், இரண்டு ஆண்டு
களுக்குப்பின் தன் அணியினருடன் பயிற்சி மேற்கொள்வதும் போட்டிகளில் கலந்துகொள்வதும் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார். தன் அணியினரில் சிலர் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டதால் முழுமூச்சுடன் பயிற்சி மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு பாதுகாப்புடன் பயிற்சிகள் மேற்கொள்ளப்
படுவதாகவும் அவர் பகிர்ந்துகொண்டார். சிங்கப்பூர் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியின் ஆண் விளையாட்டாளர்களுக்குத் தரப்
படுவதுபோல் பெண்களுக்கு மாதச் சம்பளம் ஏதும் தரப்படுவதில்லை என்றார் மோனிஷா.
விருப்ப அடிப்படையில் விளையாடி வந்த தங்களுக்கு, 300,000 வெள்ளி பரிசுத்தொகையுடன் டெலாய்ட் நிறுவனம் தன்னைப் பிரதான ஆதரவாளராக அறிவித்திருந்தது தமக்கு ஊக்கம் அளிப்பதாக இவர் கூறுகிறார்.
பெற்றோரின் ஆதரவால் பிறந்த சாதனை வேட்கை
அம்மாவுக்கு விளையாட்டுகளில் அதீத ஆர்வம். தந்தை காற்பந்து பயிற்றுவிப்பாளர். இவ்விருவர் தந்த ஊக்கத்தால் காற்பந்து விளையாட்டின் மீது மாளவிகா வுக்கு தீராத மோகம்.
ஸ்டில் ஏரியன் அணிக்காக விளையாடும் 27 வயது மாளவிகா ஹேமந்த், தளவாடத் துறையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.
“என்னுடைய பட்டப்படிப்பு முடிந்த பிறகு ஜகார்த்தாவில்
இருந்து சிங்கப்பூருக்கு எங்கள் குடும்பம் குடிபெயர்ந்தது. மாணவராக இருந்த நாள்களிலும் சரி தற்போது வேலை செய்துவரும் காலத்திலும் சரி காற்பந்து பயிற்சிக்காக நேரத்தை ஒதுக்குவது சவாலான ஒன்றாகவே இருக்கிறது.
“குடும்பத்திற்காகவும் நண்பர்களுக்காகவும் எனக்காகவும் தனிப்பட்ட நேரம் கிடைப்பது அரிது.
“இருந்தாலும் பயிற்சிக்குப் பிறகோ போட்டிக்குப் பிறகோ கிடைக்கும் மகிழ்ச்சியும் மன
நிறைவும் அளவிட முடியாதவை,” என்று கூறுகிறார் இவர்.
இந்த லீக் போட்டிக்குத் தமது அணி சிறப்பாகத் தன்னைத் தயார்படுத்தி உள்ளதாகவும் வெற்றிக்கனியைக் கைப்பற்றும் நம்பிக்கை தங்களுக்கு உள்ளதாகவும் இவர் கூறுகிறார்.
வாய்ப்பைத் தானே உருவாக்கிக்கொண்டார்
சிறுவயதிலிருந்தே சரண்யாவுக்கு காற்பந்து விளையாட்டில் அதீத ஆர்வம். ஆனால் அந்தக் காலகட்டத்தில் பெண் பிள்ளைகளுக்கென பிரத்தியேக பயிற்சி ஏதும் அவர் படித்த தொடக்கப்பள்ளியில் இல்லை. இருப்பினும் தன் ஆர்வத்தைச் சரண்யா கைவிடுவதாக இல்லை.
தன்னுடைய சகோதரர், நண்பர்கள் ஆகியோருடன் விளையாடத் தொடங்கினார் சரண்யா. இன்று சிங்கப்பூர் பிரிமியர் லீக் பெண்கள் காற்பந்துப் போட்டியில் தியோங் பாரு அணிக்காக விளையாடுகிறார் இவர்.
தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரியும் இவர், “முறையாகக் காற்பந்து விளையாட்டைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில், பெண்களுக்கெனக் காற்பந்தாட்டப் பயிற்சி அளிக்கும் தொடக்கக் கல்லூரியை நான் தேர்ந்தெடுத்தேன். பிறகு, என் பல்கலைக்கழக நாள்களில் என்னுடைய பயிற்றுவிப்பாளரின் ஊக்குவிப்பால் இந்த அணியில் சேர்ந்தேன். கடந்த ஐந்து ஆண்டு களாக அணிக்காக விளையாடி வருகிறேன்,” என்று கூறினார்.
காற்பந்து விளையாட்டில் ஆர்வமுள்ள பெண் பிள்ளைகளுக்குத் தொடக்கப்பள்ளிகளும் உயர்நிலைப்பள்ளிகளும் காற்பந்தாட்டப் பயிற்சி பெறும் வாய்ப்பை உருவாக்கித் தருவது அவசியம். விளையாட்டுத் துறையில் ஆண், பெண் என்ற பிரிவினையைத் தவிர்த்து திறமைக்கு முக்கியத்துவம் அளிப்பதே சிறப்பு என்றும் சரண்யா கூறுகிறார்.