அடையாள அரசியலை (Identity Politics) மையப்படுத்தும் கலை வடிவங்களை உருவாக்குவதில் இளையர் ப்ரியகீதா டி, 30 கைதேர்ந்தவர். தனது படைப்புகளில் மரபுடைமை சார்ந்த விவரங்களையும் புலம்பெயர்ந்த நினைவு களையும் பதிவு செய்வதில் கவனம் செலுத்தியும் வருகிறார் காட்சிக் கலைகள் தொழிலரான (Visual Arts Practitioner) இவர்.
மலாயாவின் பிரிட்டிஷ் காலனியத்துவ ஆட்சிக்காலத்தில் ரப்பர் தோட்டத்தில் வேலை பார்த்த தமிழர்களின் வரலாற்றையும் அவர்களின் வாழ்க்கைமுறையையும் பதிவு செய்யும் விதமாக ‘ஃபர்கெட் மி, ஃபர்கெட் மி நாட்’ (Forget Me, Forget Me Not) என்ற கலைக் கண்காட்சியைப் படைத்துள்ளார் இவர்.
கடந்த மே 21ஆம் தேதி முதல் இம்மாதம் 16ஆம் தேதி வரை முந்தைய கில்மன் ராணுவ முகாம் பகுதியில் நடைபெற்றுவரும் இந்தக் கண்காட்சி குறித்து கூறும் ப்ரியகீதா, “அந்தக் காலத்தின் அறியப்படாத சாமானிய தமிழர்களின் வரலாற்றை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் முயற்சியே இந்தக் கண்காட்சி.
“பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சி யின்கீழ் மலாயாவின் ரப்பர் தோட்டத் தில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கைமுறையைப் பற்றி இன்றைய தலைமுறையினர் அறிந்திட வேண்டும். அதற்காக ‘சிஜிஐ’ தொழில்நுட்ப உத்தியைப் பயன்படுத்திச் சுவரில் வரைபடங்களாக, உயர் ரக துணியில் அச்சுப்படங்களாக, காணொளிகளாக, ‘லேட்டெக்ஸ்’ எனப்படும் நீண்ட காலம் நீடிக்கும் ரப்பரில் அவர்களின் மாதிரிப் படங்களை அச்சிட்டு காட்சிப்படுத்தியிருக்கிறேன்,” என்று கூறுகிறார். இந்த மாதிரிப் படங்கள் தொங்கும் தூங்கு மஞ்சம் (hammock) வடிவில் மிக வித்தியாசமாக அமைந்துள்ளது.
ஓராண்டிற்கும் மேலாக வரலாற்றுப் பதிவுகள், ஆராய்ச்சிக் கட்டுரைகள், காலனித்துவ ஆவணக் காப்பகங்கள் போன்றவற்றின் மூலம் கண்காட்சிக்குத் தேவையான தகவல்களைத் தான் திரட்டியதாக ப்ரியகீதா குறிப்பிட்டார்.
அந்தக் காலத்தில் வாழ்ந்த தமிழரின் மகள் ஒருவரைச் சந்தித்துப் பேசியதன் மூலம் பல அரிய விவரங்களையும் தான் தெரிந்துகொண்டதாகத் தெரிவிக்கிறார்.
கடந்த 2017ஆம் ஆண்டில் வீவக அடுக்குமாடிக் கட்டடப் படிக்கட்டுகளைத் தங்கமுலாம் பூசிய தாள்களைக் கொண்டு அலங்கரித்ததால் தான் வெகுவாக விமர்சிக்கப்பட்டதாக ப்ரியகீதா பகிர்ந்துகொண்டார்.
சமூகத் தளங்களில் இவரின் செயல் பரவலாகப் பேசப்படுகிறது.
“என்னுடைய படைப்புகள் பலவாறு விமர்சிக்கப்பட்டன. மனதைப் புண்படுத்திய விமர்சனங்களிலிருந்து மீண்டுவருவது கடினமாக இருந்தது. இருப்பினும் நோக்கம், பின்னணி, வேலைப்பாடுகள் என ஒவ்வொரு கலைப் படைப்பும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளித்து வருகிறது. தொடர்ந்து இத்துறையில் புத்தாக்கச் சிந்தனையுடன் பல ஆக்கபூர்வமான கலைப் படைப்புகளை உருவாக்குவேன்,” என்று உறுதியாகக் கூறுகிறார் ப்ரியகீதா.
செய்தி: மோனலிசா