யுகேஷ் கண்ணன்
தர்ஷிணி கிருஷ்ணா
சான்றிதழ் வழங்கப்படாத பயிற்சி
களுக்கு ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் 2024ஆம் ஆண்டுமுதல் கட்டணக் கழிவுகளை ஊழியர்களுக்கு வழங்காது.
இந்தப் பயிற்சிகளுக்கு இனி ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வழங்கீடுகளைப் பயன்படுத்த முடியாது என்றும் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு ஆதரவுதரும் மொத்த பயிற்சிகளில் அது ஏழு விழுக்காடாகும்.
மனிதவளத்திற்குத் தேவையான பயிற்சிகளுக்கு மேலும் ஆதரவு அளிக்கும் முயற்சியின் அங்கமாக ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூரின் நிதி வழங்கீடு கட்டமைப்பு சீர்படுத்தப்படுவதாக கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்தார்.
தனிநபர்களுக்கான வேலை அமர்த்தல், திறன் மேம்பாடு, வாழ்க்கைத் தொழில் மேம்பாடு, தொழில்களுக்கு வேலை மறுவடிவமைப்பு, வர்த்தக உருமாற்றம் போன்ற நோக்கங்களை அடைவதற்கு பயிற்சிகள் மறுசீரமைப்புப் பெறுவதை உறுதிசெய்வதாக இது அமையும் என்றார் திரு சான்.
நேற்றுக் காலை வாழ்நாள் கற்றல் மையத்தில் நடைபெற்ற ஸ்கில்ஸ்ஃபியூச்சர் விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர் பேசினார்.
ஓராண்டுக்குக் குறைந்தது அரை மில்லியன் ஊழியர்களுக்கு மறுபயிற்சி அளிக்கும் சிங்கப்பூரின் பெரியோர் கல்வித் துறையின் வருங்காலத் திட்டத்தையும் அவர் அறிவித்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கல்வி கலந்துரையாடலில் இதுகுறித்து முன்னதாக அவர் அறிவித்திருந்தார்.
சிங்கப்பூரின் ஊழியரணி அமைப்பு பெரிய அளவில் திறன் மேம்பாடு அடைய நான்கு முக்கிய சவால்களைக் களைய வேண்டும் என்று சுட்டிக்காட்டினார் அமைச்சர். முதலில் ஊழியர்களுக்குத் தங்கள் திறன்களை வளர்த்துக்கொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அவர்களுக்கு அதன் மீது ஆர்வத்தை உருவாக்க வேண்டும். இரண்டாவதாக, சிறிய, நடுத்தர நிறுவனங்கள் ஊழியர்களிடம் எத்தகைய திறன்களை எதிர்பார்க்கின்றன என்பதைத் தெளிவாக வெளிப்படுத்தும் வாய்ப்புகளை அமைத்துத் தர வேண்டும்.
மூன்றாவதாக, இந்நிறுவனங்கள் அவற்றுக்குத் தேவையான திறன்களைக் குறிப்பிட்டபின், அவற்றை ஊழியர்களுக்குக் கற்பிக்க புதிய, தரமான பயிற்சித் திட்டங்களை வகுக்க வேண்டும்.
இறுதியில், இப்பயிற்சித் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்த வேண்டும். புதிய திறன்களைக் கற்கும் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை வளர்ந்து வந்தாலும், அவ்வளர்ச்சி யின் வேகத்தை அதிகரிப்பதற்காகவே இந்த புது முயற்சி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் கூறினார்.
சிங்கப்பூரின் பயிற்சி, பெரியோர் கல்வித் துறையில் ஆற்றல் மேம்பாட்டை மெருகூட்ட வாழ்நாள் கற்றல் கல்விக் கழகம், ஐந்து பலதுறைத் தொழிற்கல்லூரிகளுடனும் என்டியுசி கற்றல் மையத்துடனும் இரு வெவ்வேறு இணக்கக் குறிப்புகளில் கையெழுத்திடும் என்று தெரிவித்தார் அமைச்சர்.
"இது அர்த்தமுள்ள பயணம். இதை சரியாக செய்தால், பொருளியலின் அனைத்துத் துறைகளிலும் உள்ள ஊழியர்களும் தொழில்களும் இந்த முதலீட்டால் பலனடைகிறார்கள்," என்று அவர் சொன்னார்.