26 ஏக்டிவ்எஸ்ஜி கூடங்களை மே மாதம் பயன்படுத்தியோர் 238,600 பேருக்கும் அதிகம்
சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்று 2020ல் தலைகாட்டத் தொடங்கியது முதல் இரண்டு ஆண்டுகளுக்கும் அதிக காலமாக உடற்பயிற்சிக் கூடங்களும் உடலுறுதி நிலையங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன.
ஒரு வழியாக அவை இப்போது தலைதூக்கத் தொடங்கி இருக்கின்றன. இது பற்றி கேட்டதற்குப் பதிலளித்த 'ஸ்போர்ட் சிங்கப்பூர் இயக்கம்', தனது 26 ஏக்டிவ்எஸ்ஜி உடற்பயிற்சி கூடங்களை கடந்த மே மாதம் 238,600க்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளது.
இது, தொற்று தலைகாட்டியதற்கு முன் 2019ஆம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 6 விழுக்காடு அதிகம் என்றும் அது கூறியது. இதேபோலவே ஏக்டிவ்எஸ்ஜி விளையாட்டு நிலையங்களில் இடம்பெறும் செயல்திட்டங்களில் கலந்துகொள்வோரும் அதிகரித்து இருக்கிறார்கள்.
மே மாதம் ஸும்பா, யோகா போன்றவற்றில் 108,400க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கெடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
இது, 2019 மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 16% அதிகம். ஸ்போர்ட்எஸ்ஜி இயக்கம் 19 விளையாட்டு நிலையங்களை நடத்துகிறது.
தனது கூடைப்பந்து, பேட்மிண்டன் விளையாட்டு இடங்களுக்கும் நீச்சல் குளங்களுக்கும் முன்பதிவுகளும் அவற்றைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து இருப்பதாக இந்த இயக்கம் தெரிவித்தது.
சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்று காரணமாக உடலுறுதி தொழில்துறை இரண்டாண்டுகாலம் முடங்கிக் கிடந்தது. அதனையடுத்து இப்போது உடற்பயிற்சி நடவடிக்கைகளில் அதிக மக்கள் ஈடுபடுகிறார்கள் என்பதையே இந்த நிலவரங்கள் காட்டுகின்றன.
கொவிட்-19 தொற்று காரணமாக உடற்பயிற்சிக் கூடங்கள், உடலுறுதி நிலையங்களின் உரிமையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு உறுதுணையாக இருந்து உதவுவதாக 2021 மே மாதம் ஸ்போர்ட்எஸ்ஜி இயக்கம் உறுதி வழங்கி பல வழிகளிலும் உதவியது. பிறகு படிப்படியாக கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டன.
கிட்டத்தட்ட கொவிட்-19க்கு முன்பு இருந்த நிலவரம் இப்போது திரும்பிவிட்டது.
இருந்தாலும்கூட ஏக்டிவ் எஸ்ஜி உடற்பயிற்சிக் கூடங்களில் இன்னமும் முகக்கவசம் அணிவது போன்ற பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.