ஆரம்பக்கல்வித் துறைசார்ந்த 2,200க்கும் அதிகமான கல்வியாளர்களின் பயிற்சிக்காகக் கடந்த ஆறு ஆண்டுகளில் $13 மில்லியனுக்கு மேல் பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு (இசிடிஏ) முதலீடு செய்துள்ளதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் தெரிவித்துள்ளார்.
அமைப்பு நேற்று 'பிடிபி' எனப்படும் தொழில் நிபுணத்துவத் திட்டத்தின்கீழ் 456 கல்வியாளர்களைப் புதிதாக நியமித்திருந்த அதன் வருடாந்திர நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த மூன்றாண்டு காலத் திட்டத்தில் 2016ஆம் ஆண்டுமுதல் இதுவரை மொத்தம் 2,735 கல்வியாளர்கள் இணைந்து தங்களின் வாழ்க்கைத்தொழிலில் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் மேலும் முக்கியமான பொறுப்புகளை ஏற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.
ஆசிரியர்கள், தலைவர்கள் உட்பட இவ்வாண்டு ஜூலை நிலவரப்படி சுமார் 650 கல்வியாளர்கள் திட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளதாக அறியப்படுகிறது.
'பிடிபி'வழி பலன்
பாலர் பள்ளி ஆசிரியர்களில் 'பிடிபி'யை முடித்துள்ள கிட்டத்தட்ட 50 விழுக்காட்டினர், திட்டத்தின் இறுதிக்குள் மேலும் முக்கியமான, பல்வகையான வேலைப் பொறுப்புகளைக் கையாள்வதாக திருவாட்டி சுன் குறிப்பிட்டார்.
இதன்படி மற்றக் கல்வியாளர்களுக்கு வழிகாட்டுவது, பள்ளி நிலையிலான திட்டங்களை முன்னெடுப்பது போன்ற பொறுப்புகளை அவர்கள் மேற்கொள்கின்றனர்.
பாலர் பள்ளி ஆசிரியர்கள், பாலர் பள்ளித் தலைவர்கள், மழலையர் பராமரிப்பாளர்கள், அதாவது மூன்று வயது வரையிலான இளம் சிறார்களைக் கவனித்துக்கொள்வோர் ஆகியோர் என மூவகை 'பிடிபி'கள் உள்ளன.
ஊக்குவிப்புகள்
மூன்று ஆண்டுத் திட்டத்தின் இடையிடையே குறிப்பிட்ட மைல்கல்களை அடையும் ஆசிரியர்களுக்கு ரொக்க வெகுமதிகளும் வழங்கப்படுகின்றன.
இதன்படி பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கும் மழலையர்களுக்கான ஆசிரியர்களுக்கும் மொத்தமாக 12,000 வெள்ளியும் நிலையத் தலைவர்களுக்கு 15,000 வெள்ளியும் கிடைக்கும். ஆரம்பக்கல்வி நிபுணர்களை உருவாக்குவதற்கு அரசாங்கம் முன்னுரிமை கொடுத்து வருவதாக திருவாட்டி சுன் கோடிகாட்டினார்.
அரசாங்கத் திட்டங்கள்
இதனாலேயே கல்வியாளர்களுக்கும் தலைவர்களுக்கும் வழிகாட்டவல்ல பல்வேறு திட்டங்களை அரசாங்கமும் தொடங்கியுள்ளதாக அவர் சுட்டினார்.
அவற்றில் ஆரம்பக்கல்வித் துறையின் வெவ்வேறு வேலைகளுக்குத் தேவையான வாழ்க்கைத்தொழில் பாதைகளையும் ஆற்றல்களையும் விளக்கும் 'ஆரம்பக்கல்வித் துறைக்கான திறன்சார்ந்த பணிச்சட்டம்' என்ற திட்டமும் ஒன்று.
அனுபவம் வாய்ந்த பாலர் பள்ளி ஆசிரியர்கள் தங்களின் பயணத்தைப் பற்றிச் சக ஆசிரியர்களுடன் பகிர்ந்துகொள்ளும் ஒரு தளமாக 'ஆரம்பக்கல்விக் கற்றல் சமூகங்கள்' திட்டமும் அரசாங்கத்தால் தொடங்கப்பட்டுள்ளது.