சமூக ஊடகங்களில் தங்கள் பிள்ளைகளுடன் யார் தொடர்புகொள்ள முடியும், யார் உரையாட முடியும் என்பதைப் பெற்றோர்களும் காப்பாளர்களும் கட்டுப்படுத்தவும் பிள்ளைகள் இணையத்தில் என்னென்ன பார்க்க முடியும் என்பதற்கு வரம்பிடவும் தொடர்பு, தகவல் அமைச்சு பரிந்துரைகள் சிலவற்றைச் சமர்ப்பித்துள்ளது.
இத்தகைய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தினால் பிள்ளைகளை இணையத் தீங்கிலிருந்து பாதுகாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சு நேற்று வெளியிட்ட கலந்தாலோசனை அறிக்கையில் இப்பரிந்துரைகள் குறிப்பிடப்பட்டன. இணையப் பயனாளர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கக்கூடிய இந்தச் சேவைகளை அவர்கள் வலுவிழக்கச் செய்தால், இளம் பயனாளர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்தச் சேவைகளின் அமைப்புமுறை இயங்கும் என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
உயிரை மாய்த்துக்கொள்ளுதல், உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுதல் போன்ற அதிக அபாயமுடைய சூழல்கள் தொடர்பான தகவல்களை இணையத்தில் தேடும் பயனாளர்களுக்கு உதவி அமைப்புகளின் தொடர்பு எண்கள், மனநல ஆலோசனைச் சேவைகள் தொடர்பான தகவல்களைக் காண்பிக்கும் வகையில் சமூக ஊடகத் தளங்கள் அமைந்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டது.
சிங்கப்பூரில் இணையப் பாதுகாப்பு தொடர்பில் பொதுமக்களும் கருத்து தெரிவிக்கலாம்.