இளையர்களுக்காக இளையர்களே முன்னெடுத்து நடத்திய வகையில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரவை அண்மையில் ஏற்பாடு செய்திருந்த 'சிங்கப்பூர் தமிழ் இளையர் மாநாடு 2022' அமைந்தது. தமிழ்மொழி சார்ந்த பல்வேறு தலைப்புகளில் சிறப்புரைகள், குழு விவாதங்கள், கலந்துரையாடல்கள்வழி நிகழ்வில் பங்கேற்ற இளையர்கள் பயனடைந்தனர். நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்களை விவரிக்கிறது இவ்வார இளையர் முரசு.
மொழிக் கற்றல் என்பது வெறும் கல்விசார் பாடமாக மட்டும் அல்லாமல் ஒரு கலாசார அனுபவமாகவும் இருத்தல் அவசியம். இதனை உணர்த்தும் விதமாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரவை, 'நாளைய தலைவர்களின் குரல்' எனும் கருப்பொருளில் இளையர்களுக்காக 'சிங்கப்பூர் தமிழ் இளையர் மாநாடு 2022' எனும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இம்மாநாட்டில் தமிழ்மொழி சார்ந்த பல்வேறு தலைப்புகளில் சிறப்புரைகள், குழு விவாதங்கள், கலந்துரையாடல்கள் ஆகியவை நேரடியாகவும் இணையம் வாயிலாகவும் மொத்தம் மூன்று நாள்களுக்கு நடைபெற்றன.
இம்மாதம் 2, 3 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை ஆறு மணி வரை ஸூம் தளத்திலும் நிறைவு நாளான ஒன்பதாம் தேதியன்று, மாலை நான்கு மணி முதல் இரவு 8.30 மணி வரை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் 'ஷா ஃபவுண்டேஷன் அலும்னை ஹவுஸ்' அரங்கில் நேரடியாகவும் நிகழ்ச்சிகள் நடந்தன.
சிங்கப்பூரிலுள்ள 16 முதல் 27 வயது வரையுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட உயர்நிலைப்பள்ளி, புகுமுக வகுப்பு, பல்கலைக்கழக மாணவர்களுடன் முழுநேர தேசிய சேவையாளர்கள், இளம் ஊழியர்கள் ஆகியோரும் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.
தமிழர்களின் அடையாளத்தை முன்னிறுத்த இளையர்கள் தமிழ்மொழியைக் கற்பது அவசியமானது என்று மாநாட்டின் தொடக்க விழாவில் தொடர்பு, தகவல், சுகாதார அமைச்சுகளின் மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி கூறினார். மொழியானது செழித்து வளர கற்றலும் அனுபவமும் பக்கபலமாய் இருக்கும் என்றும் அவர் சுட்டினார்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் 43ஆவது செயற்குழு ஏற்பாடு செய்திருக்கும் இம்மாநாட்டின் முதலாம் நாளன்று 'கல்வி', 'இன்றைய சமூகத்தில் தமிழ் இளையர்களின் பங்கு' ஆகிய இரு தலைப்புகளில் பேசப்பட்டன. இரண்டாம் நாளில் தமிழர் கலை, கலாசாரம், தமிழ் மொழி ஆகிய கருப்பொருள்களில் கருத்துகள் பரிமாறப்பட்டன. ஒவ்வொரு தலைப்பைப் பற்றியும் ஆழமான விளக்கங்கள் அளிக்க சிறப்புப் பேச்சாளர்களும் வருகை தந்திருந்தனர்.
சிங்கப்பூர் தமிழ் இளையர்களுக்கு நிதியியல் துறை கல்வியறிவின் முக்கியத்துவத்தை எவ்வாறு புரிய வைப்பது, வழக்கத்திற்கு மாறான கல்விப் பாதைகளைத் தேர்ந்தெடுப்பதால் சமூகத்தில் ஏற்படும் பிரச்சினைகள், கலாசார அடையாளமும் சமூக-பொருளாதார வளர்ச்சியும் தமிழ் இளையர்களின் கல்வியில் ஏற்படுத்தும் தாக்கம் ஆகிய தலைப்புகளில் இளையர்கள் தங்களின் குழுக்களில் கலந்துரையாடினர்.
வாக்குப்பதிவு செய்யும் புதிய முயற்சி
இவ்வாண்டின் மாநாட்டில் முதல்முறையாக வாக்குப்பதிவு நடவடிக்கை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இளையர்கள் தங்களது சிறு குழுக்களில் பிரச்சினைகள் பற்றிய கருத்துகளை முன்வைத்தபின், கலந்துரையாடிய தலைப்புகளைச் சார்ந்த அவர்களது சொந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் இந்நடவடிக்கை அமைந்தது.
தேசிய பல்கலைக்கழகத்தின் தமிழர் பேரவை மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு இளையர்கள் ஆர்வத்துடன் பதிலளித்தனர். இந்நடவடிக்கை அனைத்து தலைப்புகளின் கலந்துரையாடல்களுக்கு இடையே நடத்தப்பட்டது.
வாக்குப்பதிவு நடவடிக்கைக்குப் பின் இளையர்கள் மீண்டும் குழுநிலையில் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பற்றி கலந்துரையாடத் தொடங்கினர். மத்திய சேம நிதி வழங்கும் சேவைகள், வங்கிகள் வழங்கும் சேமிப்புத் திட்டங்கள் ஆகியவை தமிழ் இளையர்களுக்கு நிதி வகுத்தலில் உதவும் என்று அவர்கள் கருதினர்.
வழக்கத்துக்கு மாறான கல்விப் பாதைகளைத் தேர்ந்தெடுத்தாலும் அவற்றில் பலன்கள் உண்டு. அவை குறித்த விழிப்புணர்வைச் சமூகத்தில் ஏற்படுத்தி இக்குறிப்பிட்ட பாதைகளில் இளையர்கள் துணிந்து செல்ல முடியுமென அவர்கள் தெரிவித்தனர்.
குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், சிண்டா போன்ற அமைப்புகள் வழங்கும் உதவியைப் பயன்
படுத்திக்கொண்டு கல்வியில் முன்னேறுவது அவசியம் என்றும் இளையர்கள் கூறினர்.
சமூகத்தில் தமிழ் இளையர் பங்கு
'சமூகத்தில் தமிழ் இளையர்களின் பங்கு' என்ற தலைப்பு குறித்துப் பேச தேசிய பல்கலைக்கழக தமிழ்ப் பேரவையின் தலைவர் திரு விஜயராஜ் முத்துக்குமரன், இந்திய சமூகத்திற்கு உதவும் மனநல நிலையம் ஒன்றின் நிறுவனரான திரு தேவன் ஆகியோர் வந்திருந்தனர்.
அவர்கள் உரையாற்றிய பின், இளையர்கள் எவ்வாறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளில் ஈடுபடலாம், அவர்களுக்கு அரசியல், அரசாங்கக் கொள்கை அமைப்புகள் குறித்த விழிப்புணர்வு இருப்பதன் அவசியம், தமிழ் இளையர்களிடையே குறைந்துவரும் தமிழ்மொழி, கலாசார ஈடுபாடு, அவர்களது மனநலனின் முக்கியத்துவம் ஆகிய தலைப்புகளில் பங்கேற்பாளர்கள் கலந்துரையாடினர்.
இத்தலைப்புகளில் சொல்லப்பட்ட பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் இளையர்கள் பகிர்ந்துகொண்டனர்.
பள்ளிகள் வாயிலாகவும் ஊடகங்கள் வாயிலாகவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, அடித்தள அமைப்புகளுடன் இளையர்கள் பணியாற்றுவதன் வழி அரசாங்கக் கொள்கைகளை அறிவது போன்ற தீர்வுகளைப் பங்கேற்பாளர்கள் முன்வைத்தனர்.
அத்துடன் தமிழ்மொழியில் பேசி, பயின்று, மற்றவர்களிடம் தமிழ் கலாசாரத்தைப் பற்றி பகிர்ந்து தமிழ் அடையாளத்தை வளர்ப்பது, இளையர்களின் மனநலனைக் காக்க அவர்கள் உதவி நாடக்கூடிய தளங்களை அவர்களுக்குத் தெரியப்படுத்துவது ஆகிய ஆலோசனைகளையும் பங்கேற்பாளர்கள் குறிப்பிட்டனர்.
பங்கேற்பாளர்கள் கருத்து
இம்மாநாட்டின் முதல் நாளில் கலந்துகொண்ட விக்டோரியா தொடக்கக் கல்லூரி மாணவி ப்ரியதர்ஷினி நெடுமாறன், 16, "தற்போதைய இளையர்கள் எதிர்நோக்கும் சவால்கள், அவற்றை அவர்கள் எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் பற்றிய கலந்துரையாடல்கள், தமிழ் சமூகத்திற்கு என்னால் என்ன செய்ய முடியும் என்ற எண்ணத்தை என்னுள் எழுப்பியுள்ளன," என்று கூறினார்.
ஆக்கபூர்வமான மாற்றங்கள் இளையர்களிடமிருந்து தொடங்க வேண்டும் என்றும் எந்த ஒரு யோசனையும் செயல் உருவம் பெற்றால் மட்டுமே சமூகத்தில் நிரந்தர நிலையை அடையும் என்றும் புரிந்துகொண்டதாக இம்மாநாட்டில் கலந்துகொண்ட கிஷர்ன் தேவராஜ், 22, கூறினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பாலமுருகன் பூஜாஸ்ரீ, 16, "பல இளையர்களுடன் தமிழில் பேசி கலந்துரையாடியதும் மொழிசார்ந்த விவாதங்களில் ஈடுபட்டதும் மிகவும் பயனுள்ள அனுபவமாக இருந்தது. இந்த மாநாடு சக இளையர்களை சந்திப்பதற்கும் அவர்களுடன் நட்புறவு ஏற்படுத்திக்கொள்வதற்கும் நல்லதொரு தளமாக அமைந்தது," என்று கூறினார்.
கலைத்துறையும் தமிழ் இளையரும்
இரண்டாம் நாள் நடைபெற்ற கலை, கலாசாரத் தொகுப்பில் சிறப்புப் பேச்சாளராக திருவாட்டி மீனலோச்சனி ஆனந்தன் உரையாற்றினார். 'மாகூலம் கலைக்கூடம்' என்ற நிறுவனத்தின் உரிமையாளரான இவர், தமிழ் கலைத்துறையில் இளையர்கள் பணிபுரிய எத்தகைய சவால்கள் உள்ளன என்பது பற்றிப் பகிர்ந்துகொண்டார்.
இந்தியப் பெற்றோர் கலைத் துறையில் தங்கள் பிள்ளைகள் பணியாற்றுவதை ஆதரிக்காதது, அரசாங்கம் தற்போது இக்கலைகளுக்கு அளித்துவரும் ஆதரவு போதாமல் இருப்பது, கலைத்துறையில் ஈடுபட விரும்பும் இளையர்களுக்குப் போதுமான வழிகாட்டுதல் இல்லாதது போன்ற பிரச்சினைகள் பற்றி அவர் பேசினார்.
இளம் வயதிலேயே மாணவர்களுக்குத் தமிழ்மொழி சார்ந்த கலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் முக்கியத்துவம் பற்றியும் அவர் கருத்துரைத்தார். அவரது உரைக்குப் பின், இளையர்கள் தமிழ் கலாசாரத்தில் பெண்களின் பங்கு, தமிழ் கலைத்துறையில் பணியாற்றுவது போன்ற கருப்பொருள்களையொட்டிச் சிறு குழுக்களில் கலந்துரையாடினர்.
தமிழ் கலாசாரத்தின்மீது பிற கலாசாரங்கள் ஏற்படுத்திவரும் தாக்கம், தமிழ் சமூகத்தில் பெண்களுக்கு இருக்கும் கட்டுப்பாடுகள், தமிழ்த் திரைப்படங்களும் ஊடகங்களும் தமிழ் கலாசாரத்தையும் பெண்களையும் தவறான கண்ணோட்டத்தில் சித்திரிப்பது, கலைகளைச் சிறு வயதில்தான் கற்க முடியும் என்ற தவறான புரிதல் போன்ற பல பிரச்சினைகள் பற்றி இளையர்கள் காரசாரமாக விவாதித்தனர்.
பிரச்சினைகளை முன்வைத்தபின் வாக்குப்பதிவு நடவடிக்கையில் ஈடுபட்ட இளையர்கள், பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பற்றி அவர்களது குழுக்களில் கலந்து பேசத் தொடங்கினர்.
பள்ளிகளில் மேலும் பல தமிழ் கலை சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துவது, அக்கலைகளைக் கற்கக்கூடிய வாய்ப்புகள்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது, இந்தக் கலைகளின்வழி பணம் ஈட்டும் வாய்ப்புகளை உருவாக்குவது, தமிழ் ஊடகங்கள் இதுபோன்ற கலைகளை விளம்பரப்படுத்துவது எனப் பல தீர்வுகளை அவர்கள் முன்வைத்தனர்.
நிறுவனங்கள் வேலை-வாழ்க்கை சமநிலையை உறுதிசெய்யும் வண்ணம் தமிழர்களைக் கலைசார்ந்த துறைகளில் பங்கேற்க அனுமதிப்பதோடு ஆதரிக்கவும் செய்யலாம் என சில இளையர்கள் குறிப்பிட்டனர்.
கருத்துப் பரிமாற்றங்களை முடித்த இளையர்கள் தமிழ்மொழி பற்றி பேச ஆயத்தமாகினர்.
'இல்லங்களில் தமிழ்மொழிப் புழக்கம் குறைந்துள்ளது'
'இன்றைய காலகட்டத்தில் தமிழ்மொழி' என்ற தலைப்பில் பேச சிறப்பு விருந்தினராக வசந்தம் தொலைக்காட்சிப் படைப்பாளரும் 'தி மீடியா' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான திரு முகமது அலி பங்கேற்றார். ஊடகத் துறையில் 30 ஆண்டு
களுக்கும் மேலாக பணிபுரிந்துவரும் இவர், சிங்கப்பூர் இல்லங்களில் தமிழர்கள் தமிழ் பேசும் விகிதம் குறைந்து வருவதைச் சுட்டிக் காட்டினார்.
புள்ளிவிவரத் துறையின் ஆய்வுகளின்படி 2000ஆம் ஆண்டு 3.2% சிங்கப்பூர் இல்லங்களில் தமிழ் பேசப்பட்டதாகவும் 2020ஆம் ஆண்டு 2.5% இல்லங்களில் மட்டுமே தமிழ் பேசப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலமென மூன்று காலங்களிலும் சிங்கப்பூரில் தமிழுக்கான இடம், வீட்டில் தமிழ்மொழி புழக்கத்தில் இருப்பது, கல்வித் திட்டமைப்பில் தமிழுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் போன்ற கருப்பொருள்களில் தனது கருத்துகளைப் பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்துகொண்டார் திரு அலி.
தமிழும் தொழில்நுட்பமும்
இவரை அடுத்து தொழில்நுட்பத்தின் வழி தமிழ்மொழியை எவ்வாறு வளர்க்கலாம் என்ற தலைப்பில் உரையாற்றினார் திரு சிவகுமரன் சாத்தப்பன்.
அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பின் இயக்குநர்களில் ஒருவரான இவர், தொழில்நுட்பம் எவ்வாறு தமிழ்மொழியின் பயன்பாட்டையும் பண்பாட்டையும் பாதித்துள்ளது, தொழில்நுட்ப வளர்ச்சியின் நடுவே தமிழின் இடம், தொழில்நுட்பத்தின் வழி எவ்வாறு தமிழ்மொழியை வளர்க்கலாம் போன்ற கருப்பொருள்களில் தனது கருத்துகளை முன்வைத்தார்.
சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப் பட்டவர்களின் உரை முடிந்தபின் மீண்டும் இளையர்கள் தங்கள் குழுக்களில் கருத்துகளைப் பகிரத் தொடங்கினர்.
தொழில்நுட்பம் வளர்ந்து வந்தாலும் தமிழ்ப் பெயர்களைச் சரியாக தட்டச்சு செய்ய முடியாமல் போவது, ஒலிபெயர்ப்பு செய்வது, தமிழ் மாணவர்களிடையே தமிழ்மொழியின் ஆர்வத்தை வளர்க்க முடியாதது, பிற இன நண்பர்களுக்கு நம் கலாசாரப் பெருமையை அறிமுகப்படுத்தாமலிருப்பது போன்ற பல பிரச்சினை
களையும் கருத்துகளையும் இளையர்கள் கூறினர்.
வாக்குப்பதிவு நடவடிக்கையில் வீட்டில் தமிழ் பேசுவீர்களா, பள்ளிகள் தமிழுக்குப் போதுமான அளவு ஆதரவு தருகின்றனவா, தொழில்நுட்பம் தமிழுக்குச் சாதகமா பாதகமா போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன.
கேள்விகளுக்கு ஆர்வத்துடன் பதிலளித்த இளையர்கள், நடவடிக்கை முடிந்தபின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து கலந்துரையாடத் தொடங்கினர்.
சமூக ஊடகங்களின்வழி தமிழ்மொழியின் சிறப்பை உணர்த்துவது, மொழியின் மீது பெருமை கொண்டு அதை அதிகமாகப் பேசுவது, ஊடகங்கள் இக்காலத்திற்கு ஏற்றாற்போல் நாடகங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றை ஒளிபரப்புவது போன்ற தீர்வுகளை இளையர்கள் பகிர்ந்துகொண்டனர்.
எதிர்நோக்கிய சவால்கள்,
கிட்டிய வெற்றிகள்
கலந்துரையாடல்களை வழிநடத்தியவர்களில் ஒருவரான முன்னாள் தேசிய பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரவைத் தலைவர், குமாரி அஃப்பிபா ஷஃபானா, 21, "சமூக ஊடகங்களின் வழி தமிழ்மொழியின் சிறப்பை எடுத்துரைப்பதில் உள்ள சிக்கல்களையும் அவற்றுக்கான தீர்வுகளையும் இளையர்கள் விவாதங்களில் முன்வைத்தது அவர்களின் ஆழமான சிந்தனையைப் பிரதிபலித்தது," என்றார்.
நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவின் கல்வியியல் பிரிவுத் தலைவரான குமாரி மிரிதினி கிரிதரன், 20, கலந்துரையாடல் தலைப்புகள் குறித்து பெரிய அளவில் ஆராய்ச்சி இல்லாத நிலையில் கலந்து ரையாடல்களை எவ்வாறு வழிநடத்துவது என்ற குழப்பத்தில் இருந்ததாகக் கூறினார்.
அதனால், உதவிபெறுவதற்காக ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்களுடன் ஒரு கலந்துரையாடலை நடத்தி, அதன்வழி கிடைத்த கருத்துகளைக் கொண்டு தன் பணியை முடிந்த அளவுக்குச் செய்ததாகக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி நடைபெற்றதாக ஏற்பாட்டுக் குழுவின் துணைத் தலைவரான திரு பூமிநாதன் புஷ்பநாதன், 23, கூறினார். நிறைவு விழாவில் உள்ளூர் தொலைக்காட்சிப் பிரபலங்கள் வடிவழகன், ஜெய்னேஷ் இசுரன், ராணி கண்ணா, காயத்ரி ஷர்மா ஆகியோர் கலந்துகொண்டு இளையர்களிடையே தமிழ் மொழியை வளர்த்தல், இந்திய மரபுக்கலைகளில் உள்ள வேலைவாய்ப்புகள், வழக்கத்திற்கு மாறான கல்வி மற்றும் வேலையைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள சமூக இடர்ப்பாடுகள், சிங்கப்பூரர் மற்றும் தமிழர் ஆகிய அடையாளங்களுக்கிடையே சமநிலை காணுதல் போன்ற தலைப்புகளில் சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவுபெற்றதாகவும் பயனுள்ள பல்வேறு சிந்தனைகள் இந்த மூன்று நாள்களில் வெளிப்பட்டதாகவும் மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் திரு சாத்தப்பன் அஷ்வின் சொக்கலிங்கம், 23, கூறினார்.
படங்கள்: ஏற்பாட்டுக் குழு, பிக்சபே