இவ்வாண்டின் சிங்கப்பூர் இலக்கியப் பரிசுக்கு மூத்த எழுத்தாளர்கள் பலர் முன்மொழியப்பட்டுள்ளனர்.
கலாசாரப் பதக்கம் பெற்ற இராம கண்ணபிரான், 79, 'சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதைகள்' எனும் நூலுக்காக தமிழ் புதினம் அல்லாத பிரிவில் முன்மொழியப்பட்டார். சிங்கப்பூரின் சமூக வரலாற்றுடன் தமிழ்ச் சிறுகதைகளின் வரலாறும் ஒன்றாக இழையோடுவதை இந்தநூல் காட்டுகிறது.
மூத்த எழுத்தாளரும் ஆசிரியருமான பொன் சுந்தரராசு, 74, எழுதிய 'சுண்ணாம்பு அரிசி', தமிழ்ப் புதினங்களுக்கான பிரிவில் முன் மொழியப்பட்டுள்ளது.
1992ல் தொடங்கப்பட்ட சிங்கப்பூர் இலக்கியப் பரிசை சிங்கப்பூர் புத்தக மன்றம் இரண்டு ஆண்டு களுக்கு ஒரு முறை வழங்கி வருகிறது. தமிழ், ஆங்கிலம், மேண்டரின், மலாய் ஆகிய நான்கு அதிகாரத்துவ மொழிகளிலும், புதினம், கவிதை, புதினம் அல்லாத படைப்பு என்ற மூன்று பிரிவுகளில் பரிசுகள் வழங்கப்படுகின்றன. இவ்வாண்டு 49 படைப்புகள் நியமிக்கப்பட்டுள்ளன; 43 எழுத்தாளர்கள் நியமனம் பெற்றுள்ளனர்.
அவர்களில் 91 வயதுள்ள இரண்டு பேரும் இலக்கியப் பரிசுக்கு முன்மொழியப்பட்டனர். கலாசாரப் பதக்கம் பெற்ற மலாய் எழுத்தாளர் சுராட்மான் மக்காசான், வரலாற்று நிபுணரான பேராசிரியர் வாங் கங்வூ ஆகியோர் அவர்கள்.
முறையே அவர்கள் மலாய், ஆங்கில மொழிகளில் புதினம் அல்லாத படைப்புகளுக்காக முன்மொழியப்பட்டனர்.
சிங்கப்பூர் இலக்கியத்துக்கு ஆற்றிய பெரும் பங்குக்காக சிங்கப்பூர் புத்தக மன்றத்தின் வாழ்நாள் சாதனை விருது பேராசிரியர் எட்வின் தம்புவுக்கு வழங்கப்படும்.
தமிழ் புதினம் பிரிவில் 'சுண்ணாம்பு அரிசியைத்' தவிர, இந்திரஜித்தின் 'ரயில்', ரமா சுரேஷின் 'அம்பரம்' ஆகியவையும் பரிசுக்குப் முன்மொழியப்பட்டுள்ளன. இவை எழுத்தாளர்களின் முதல் நாவல்கள் ஆகும். மூன்றுமே இரண்டாம் உலகப் போரைப் பின்னணியாகக் கொண்டவை.
இவற்றுடன் மணிமாலா மதியழகனின் 'தேத்தண்ணி', கணேஷ்பாபு எழுதிய 'வெயிலின் கூட்டாளிகள்' சிறுகதைத் தொகுப்புகளும் பரிசுக்கு முன்மொழியப்பட்டன.
புதினம் அல்லாத படைப்புக்கான பிரிவில் அழகுநிலாவின் 'மொழி வழிக் கனவு', எம்.சேகரின் 'படைப்பும் பன்முகப் பார்வையும்' ஆகிய நூல்களும் முன்மொழியப்பட்டன.
கவிதைப் பிரிவில் பாலு மணிமாறனின் '14ஆம் மாடிக் குடியிருப்பென்பது', 'அன்பின் சில பொழுதுகள்' ஆகிய நூல்களும் இன்பா எழுதிய 'லயாங் லயாங் குருவிகளின் கீச்சொலிகள்' எனும் நூலும் பரிந்துரைக்கப்பட்டன.
சிங்கப்பூர் இலக்கியப் பரிசு விருதளிப்பு நிகழ்ச்சி ஆகஸ்ட் 25ஆம் தேதி விக்டோரியா அரங்கத்தில் நடைபெறும். ஒவ்வொரு பிரிவிலும் சிங்கப்பூர் இலக்கியப் பரிசு பெறுவோருக்கு $3,000 ரொக்கத் தொகையும் பரிசுக்கோப்பையும் வழங்கப்படும்.
நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.
https://www.eventbrite.sg/e/singapore-literature-prize-2022-awards-cere… என்ற தளத்தில் முன்பதிவு செய்வது முக்கியம்.