சிங்கப்பூர்-ஜோகூர் பாரு விரைவு ரயில் பாலக் கட்டுமானப் பகுதியில் சந்திப்பு
போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் சிங்கப்பூருக்கும் ஜோகூர் பாருவிற்கும் இடையிலான விரைவு ரயில் சேவைக்கான (ஆர்டிஎஸ்) உட்லண்ட்ஸ் நார்த் முனையத்தில், ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தரை நேற்று வரவேற்றார்.
கட்டுப்படுத்தப்பட்ட வெடிப்பு முறையின்கீழ் பாறை ஒன்று அகற்றப்படுவதை சுல்தான் நேற்றுக் காலை பார்வையிட்டார்.
'ஆர்டிஎஸ்' ரயில் பாலக் கட்டுமானப் பணிகளுக்கு அடித்தளம் அமைக்கும் பணி குறித்து சுல்தானுக்கு விளக்கிக் கூறப்பட்டது.
பாலத்தின் கட்டடக் கலை அம்சங்களைக் கொண்ட நினைவுப் பரிசை சுல்தானுக்குத் தாம் வழங்கியதாக அமைச்சர் ஈஸ்வரன் குறிப்பிட்டார்.
இருதரப்பு நட்புறவைப் பிரதிபலிக்கும் வண்ணம் அமையவிருக்கும் இந்தப் பாலத்தின் வடிவமைப்பில் ஜோகூர் சுல்தானின் பங்களிப்பும் உண்டு என்பதை அமைச்சர் நினைவுகூர்ந்தார்.
ஜோகூர் நீரிணையின் மேல் 25 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படும் இந்தப் பாலம் 2026ஆம் ஆண்டு இறுதியில் விரைவு ரயில் சேவைக்காகத் திறக்கப்படும்.
அதன் பின்னர் இரு நகரங்களுக்கும் இடையிலான போக்குவரத்து மேம்படும் என்று கூறிய திரு ஈஸ்வரன், இருதரப்பு உறவை அது மேலும் வலுப்படுத்தும் என்று குறிப்பிட்டார்.
விரைவுரயிலில் சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் நார்த் முனையத்திற்கும் ஜோகூர் பாருவின் புக்கிட் சாகார் முனையத்திற்கும் இடையிலான பயண நேரம் ஐந்து நிமிடங்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இருவழிகளிலும் ஒரு மணி நேரத்துக்குப் பத்தாயிரம் பயணிகள் இந்தச் சேவையைப் பயன்படுத்துவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகள் புறப்படும் இடத்தில் மட்டும் குடிநுழைவு நடைமுறைகளை மேற்கொண்டால் போதுமானது.
ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர் நேற்றுப் பிற்பகலில் செம்பவாங் ஆகாயப்படைத் தளத்திற்குச் சென்றிருந்தார்.
தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் சுல்தானை அங்கு வரவேற்று உபசரித்தார்.
'சிஎச்-47எஃப்' ரக பாரந்தூக்கும் ஹெலிகாப்டர் குறித்து சுல்தானுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அவர் அதில் பயணம் செய்தும் பார்த்தார்.
ஜோகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிமும் சுல்தானுடன் அங்கு சென்றிருந்தார்.
ஜோகூர் சுல்தானின் வருகையின்போது தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீயும் செம்பவாங் ஆகாயப்படைத் தளத்தில் அவரைச் சந்தித்துப் பேசினார்.
சிங்கப்பூர் ஆயுதப் படைத் தளங்களுக்கு ஜோகூர் சுல்தான் வருகை மேற்கொண்டிருப்பது, சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும் இடையிலான நீண்டகால நல்லுறவைக் காட்டுவதாக சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.