சிங்கப்பூர்ப் பள்ளிகளில் நேற்று இன நல்லிணக்க நாள் கொண்டாடப்பட்டது.
இவ்வேளையில், கிராஞ்சி உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், இனங்கள் குறித்த கண்ணோட்டம், இனப் பாகுபாடு ஆகிய அம்சங்கள் குறித்து வெளிப்படையாகக் கலந்துரையாடினர். இவை தொடர்பான விவகாரங்களைப் பள்ளியில் கலந்துரையாட கூடுதல் வாய்ப்புகள் கிடைப்பதாக இப்பள்ளியின் ஆசிரியர்கள் கூறினர்.
இதில் ஏறக்குறைய ஆயிரம் மாணவர்களும் 30 ஆசிரியர்களும் பங்கேற்றனர்.
நிற அடிப்படையில் மக்கள் தாக்கப்படுவது, காலகாலமாக நிலவும் பிற இனங்களைப் பற்றிய கண்ணோட்டம், இவற்றைக் கையாளும் வழிகள் ஆகியவை குறித்து இதில் வெளிப்படையாகப் பேசப்பட்டது.
கல்வி அமைச்சர் சான் சுன் சிங் இதில் கலந்துகொண்டு மாணவர்களின் கருத்துகளை நேரில் கேட்டறிந்தார்.
கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்ட அம்சங்களைத் தங்கள் சொந்த வாழ்வில் எதிர்கொண்டுவருவதாக மாணவர்கள் சிலர் குறிப்பிட்டனர். தோற்றத்தின் அடிப்படையிலும் நிறத்தின் அடிப்படையிலும் தாங்கள் எடைபோடப்படுவதாக அவர்கள் கூறினர்.
இத்தகைய கலந்துரையாடல் மூலம் மற்றவர்களின் கண்ணோட்டத்தை எவ்வாறு அணுகுவது என்பது குறித்தும் அதனை மாற்றும் வழிகள் குறித்தும் தெரிந்துகொண்டதாக மாணவர்கள் குறிப்பிட்டனர்.
இக்கால மாணவர்கள் சமூக ஊடகங்களுக்கும் நண்பர்களின் கருத்துகளுக்கும் அதிக முக்கியத்துவம் தருவதை ஆசிரியர்கள் சுட்டிக்காட்டினர்.
வேரூன்றிய சில கருத்துகள் எங்கிருந்து வருகின்றன, அடிப்படையற்ற கருத்துகளை எவ்வாறு எதிர்கொள்வது போன்றவற்றை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
தெம்பனிஸ் மெரிடியன் தொடக்கக் கல்லூரி மாணவர்கள் இனங்களுக்கு இடையிலான உறவுகள் குறித்துக் கலந்துரையாடினர். இதில் இரண்டாம் கல்வி அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான் கலந்துகொண்டார்.
இதற்கிடையே, பிரதமர் லீ சியன் லூங் வெளியிட்ட இன நல்லிணக்க நாள் செய்தியில் ஒவ்வொரு தலைமுறைக்கும் இன நல்லிணக்கம் குறித்து வெவ்வேறு கண்ணோட்டம் இருப்பதாகக் குறிப்பிட்டார். இன நல்லிணக்கத்தைக் கட்டிக்காப்பதற்கான முயற்சி தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய ஒன்று எனப் பிரதமர் கூறினார்.