பெண்டமியர் பகுதியில் ஒரு பேருந்து நிறுத்தத்துக்கு அருகே 12 வயது மாணவியை மானபங்கம் செய்ததற்காக நியோ பெங் நியோ, 56, என்பவருக்கு 20 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அந்த ஆடவர் ஏற்கெனவே குற்றம் செய்து தண்டனை அனுபவித்து வந்தார். திருந்தி வாழ வேண்டும் என்று அவருக்கு உத்தரவிடப்பட்டது. அந்த உத்தரவை நிறைவேற்றும் காலத்தில் அவர் மீண்டும் தவறு செய்தார்.
இதற்காக அவருக்கு கூடுதலாக 10 நாள்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
நியோ ஒரு குற்றச்சாட்டின் பேரில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதேபோன்ற இரண்டாவது குற்றச்சாட்டு, தண்டனை விதிக்கப்பட்டபோது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
மானபங்கச் சம்பவம் 2021 ஜூலை 23ஆம் தேதி நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
நியோ, மானபங்கம் தொடர்பில் ஏற்கெனவே இரு முறை குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவர். ஒவ்வொரு முறையும் அவருக்கு 15 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.